பக்கம் எண் :

இன்பத்துப் பால்
களவியல்

அதிகாரம் 114. நாணுத்துறவுரைத்தல்

அஃதாவது , சேட்படுத்தப்பட்டு ஆற்றானாகிய தலைமகன்தோழிக்குத்தன் நாண்டுறவுரைத்தலும் , தோழியை அறத்தொடுநிற்பிக்கலுற்ற தலைமகள் அவளுக்குத் தன் நாண்டுறவுரைத்தலுமாம் . இது காதல் மிகுந்த விடத்து நிகழ்வதாகலின் , காதற் சிறப்புரைத்தலின் பின்வைக்கப்பட்டது . இவ்வதிகாரத்தின் முதலேழ் குறளும் தலைமகன் கூற்று ; இறுதி மூன்றும் தலைமகள் கூற்று .

அறத்தொடு நிற்றலாவது , களவொழுக்கம் தடைப்பட்டவிடத்தும் , தலைமகளின் காமநோயை அவள் பெற்றோர் பிறழவுணர்ந்து வேலன் வெறியாட்டு நிகழ்த்து மிடத்தும் , மறுத்த விடத்தும் , தலைமகள் தோழிக்கும் தோழி செவிலிக்கும் செவிலி நற்றாய்க்கும் நற்றாய் தந்தைக்குமாக , தலைமக்கள் காதலொழுக்கம் பற்றி நடந்த வுண்மையைக் குறிப்பாகக் கூறுதல் . கற்பாகிய அறத்தைக் காத்து நிற்றலால் இது அறத்தொடு நிற்றல் எனப் பெயர்பெற்றது .

 

காம முழந்து வருந்தினார்க் கேம
மடலல்ல தில்லை வலி .

 

(சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் சொல்லியது . )

காமம் உழந்து வருந்தினார்க்கு - பெறற்கரிய மகளிரொடு காமவின்பம் நுகர்ந்து பின்பு அது பெறாது துன்புற்ற ஆடவர்க்கு ; ஏம மடல் அல்லது வலி இல்லை - தொன்று தொட்டுக் காப்பாக இருந்துவருகின்ற மடலேற்றமன்றி வேறொரு வலிமையு மில்லை .

ஏமமாதல் அத்துன்பம் நீங்குமாறு அந்நுகர்ச்சியை மீளத்தருதல் , பண்டைநாளிலும் என்போன்ற ஆடவர் இம்முறையே கையாண்டு வந்திருக்கவும் , நான் உன்னை நம்பி அதைப் புறக்கணித்தேன் . இன்று நீ எனக்குத் துணையல்லாமையை அறிந்தேனாதலின் , அவ்வழியையே கடைப்பிடித்து இன்பம் நுகரக் கருதுகின்றேன் என்றாவாறு .வலி, ஆகு பொருளது .

மடலேறும் வகை வருமாறு :-

தன் காதலியைப் பெறாத காதலன் ஆடைகளைந்து நீர்ச்சீலையணிந்து , உடம்பெல்லாம் சாம்பரைப் பூசி , எருக்கமாலை யணிந்து , தன் காதலியின் உருவம் எழுதிய படத்தைக் கையிலேந்திக் கொண்டு , அதையே நோக்கி , அவளிருக்கும் ஊர் நடுவே எல்லாருங் காணத் தவநிலையிலிருப்பன் . அவ்வூர்த்தலைவர் அவனைக் கண்டு காதலாய்விற்கு அவன் உடம்பட்டபின் , அவனைப் பனங்கருக்கு மட்டையாற் செய்த குதிலைமேலேற்றிப் பெருந் தெருவூடிழுத்துச் செல்வர் . கருக்குப் பட்ட விட மெல்லாம் அரத்தந் தோன்றாது விந்து நீர் தோன்றின் , அவன் காதலியை அவனொடு கூட்டிவைப்பர் ; இன்றேல் வையார் . இது அநாகரிகமும் பேதைமையும் மிக்க முந்து கால வழக்காதலின் , தமிழிலக்கியத்திற் குறித்திருப்பதெல்லாம் அதை நினைவுறுத்தலேயன்றி வேறன்றென்க .