(சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் சொல்லியது . ) காமம் உழந்து வருந்தினார்க்கு - பெறற்கரிய மகளிரொடு காமவின்பம் நுகர்ந்து பின்பு அது பெறாது துன்புற்ற ஆடவர்க்கு ; ஏம மடல் அல்லது வலி இல்லை - தொன்று தொட்டுக் காப்பாக இருந்துவருகின்ற மடலேற்றமன்றி வேறொரு வலிமையு மில்லை . ஏமமாதல் அத்துன்பம் நீங்குமாறு அந்நுகர்ச்சியை மீளத்தருதல் , பண்டைநாளிலும் என்போன்ற ஆடவர் இம்முறையே கையாண்டு வந்திருக்கவும் , நான் உன்னை நம்பி அதைப் புறக்கணித்தேன் . இன்று நீ எனக்குத் துணையல்லாமையை அறிந்தேனாதலின் , அவ்வழியையே கடைப்பிடித்து இன்பம் நுகரக் கருதுகின்றேன் என்றாவாறு .வலி, ஆகு பொருளது . மடலேறும் வகை வருமாறு :- தன் காதலியைப் பெறாத காதலன் ஆடைகளைந்து நீர்ச்சீலையணிந்து , உடம்பெல்லாம் சாம்பரைப் பூசி , எருக்கமாலை யணிந்து , தன் காதலியின் உருவம் எழுதிய படத்தைக் கையிலேந்திக் கொண்டு , அதையே நோக்கி , அவளிருக்கும் ஊர் நடுவே எல்லாருங் காணத் தவநிலையிலிருப்பன் . அவ்வூர்த்தலைவர் அவனைக் கண்டு காதலாய்விற்கு அவன் உடம்பட்டபின் , அவனைப் பனங்கருக்கு மட்டையாற் செய்த குதிலைமேலேற்றிப் பெருந் தெருவூடிழுத்துச் செல்வர் . கருக்குப் பட்ட விட மெல்லாம் அரத்தந் தோன்றாது விந்து நீர் தோன்றின் , அவன் காதலியை அவனொடு கூட்டிவைப்பர் ; இன்றேல் வையார் . இது அநாகரிகமும் பேதைமையும் மிக்க முந்து கால வழக்காதலின் , தமிழிலக்கியத்திற் குறித்திருப்பதெல்லாம் அதை நினைவுறுத்தலேயன்றி வேறன்றென்க .
|