அறத்துப் பால் துறவறவியல் அதிகாரம் 29. கள்ளாமைஅஃதாவது , பிறர் பொருளை மறைவாகக் கவராமை. இது கவர்தலும் மறைவிற் செய்தலுமாகிய இருமடிக் குற்றம். ஒரு தீவினையை ஆசையொடு கருதுதலும் அதைச் செய்தலோ டொக்கு மாதலின், கள்ளாமை என்பது களவு செய்யாமையும் களவு செய்யக் கருதாமையும் என இருதிறப்படும். களவு செய்யாமை இல்லறத்திலும் கடியப்படுவதே. ஆயின் , துறவறம் தூய்மை நிலையில் இல்லறத்தினும் உயர்ந்ததாதலின் , களவு செய்யக் கருதுதலும் அதிற் குற்றமாம். இவ்விரு திறத்தையும் ஒரே யிடத்திற் கூறுவதே தக்கதாகலின் , இரண்டையுங் கூறுதற்கேற்ற துறவறவியலிற் கூறினார் . ஆயினும் , களவு செய்யாமை ஈரறத்திற்கும் பொதுவாம். களவு செய்தலும் கூடா வொழுக்கத்தைச் சேர்ந்ததினாலும் , காமம் பற்றிய கூடா வொழுக்கமும் களவாய் நிகழ்தலானும் , இவ்வகை யொற்றுமை பற்றி உயர்திணைப் பொருள் பற்றிய களவை விலக்கும் கூடா வொழுக்கத்தின் பின் அஃறிணைப் பொருள் பற்றிய களவு விலக்கும் வைக்கப்பட்டது. கள் என்னும் முதனிலை முதற்காலத்திற் களவு செய்தலைக் குறித்ததே. கள்ளம் , கள்ளத்தனம் , கள்ளன் , கள்வு , களவு என்னும் சொற்களை நோக்குக. பிற்காலத்திற் கள் என்னும் முதனிலை தன் பொருளை யிழந்தபின், தொழிற் பெயரொடு துணைவினை சேர்ந்த களவுசெய் என்னும் கூட்டுச்சொல் முதனிலை தோன்றிற்று. "கட்குவான் பரிக்கில் ஞேலுவான் பரிக்கேணம்" . என்னும் மலையாளப் பழமொழியையும் நோக்குக. |