பொருட்பால் அரசியல் அதிகாரம் 55. செங்கோன்மை அஃதாவது , அரசனாற் கையாளப்பெறும் நேர்மையான ஆட்சி முறை . நேர்மையான ஆட்சி நேரான கோல்போலிருத்தலால் செங்கோல் எனப் பட்டது . குடிகள் ஆக்கள் போலவும் அரசன் ஆயன் போலவுமிருத்தலால் , அரசன் கோன் எனப்பட்டான் . கோ = ஆ (பசு) . கோவன் = (க) ஆயன். "கோவனிரை மீட்டனன்" (சீவக. 455) (உ) அரசன், "கோவனும் மக்களும்" (சீவக . 1843) கோவன் - கோன் - கோ = அரசன் . கோன் = ஆயன் , அரசன் , தலைவன் . அரசன் கையிலுள்ள கோல் ஆடுமாடு மேய்க்கும் இடையன் கையிலுள்ள கோல் போன்றது . அச்சின்னத்தின் பெயர் அரசனையாவது அவனாட்சியையாவது குறிக்கும் போது சின்னவாகு பெயராம் . கோலின் தன்மை கோன்மை . செங்கோலின் தன்மை செங்கோன்மை . செம்மை = நேர்மை . கோணாமை , நெறியினின்றும் விலகாமை . "வடநூலாரும் தண்டமென்றார்" , என்றார் பரிமேலழகர் . வடநூலில் தண்டம் என்பது தண்டிக்கும் அதிகாரத்தைக் குறிக்குமேயன்றி , தமிழிற்போல் அரசாட்சியைக் குறிக்காது . மேலும் , அச்சொல்லும் தென்சொல்லே. செங்கோன்மை சோர்வில்லாத அரசனாலேயே கையாளப்படத் தக்கதாதலின் , இது பொச்சாவாமையின் பின் வைக்கப்பட்டது . |