பக்கம் எண் :

பொருட்பால்
உறுப்பியல்

அதிகாரம் 70. மன்னரைச் சேர்ந்தொழுகல்

அஃதாவது, அமைச்சர், குருக்கள் , படைத்தலைவர், தூதர், ஒற்றர் ஆகிய ஐம்பெருங் குழுவினர் அரசனையடுத்து ஒழுகும் முறை. முந்தின அதிகார முதற்குறளில் 'வேந்தவாம் பண்புடைமை 'யென்று குறிக்கப்பட்டது இதுவேயாதலின், இது தூதின்பின் வைக்கப்பட்டது.

 

அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
விகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.

 

இகல் வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார் -வலிமையுள்ள அரசரை அடுத்தொழுகும் அமைச்சர் முதலியோர்; அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க- அவரினின்று மிக நீங்காமலும் அவரொடு மிக நெருங்காமலும் தீயருகே குளிர்காய்வார் போல இடைப்பட்ட இடத்தில் நிற்பதும் இருப்பதும் செய்க.

'அரசன் அன்று கொல்லும்; தெய்வம் நின்று கொல்லும்.'
"அருளு மேலர சாக்குமன் காயுமேல்
வெருளச் சுட்டிடும் வேந்தெனு மாதெய்வம்
மருளி மற்றவை வாழ்த்தினும் வையினும்
அருளி யாக்க லழித்தலங் காபவோ."

(சீவக. 247)


"தீண்டி னார்தமைத் தீச்சுடும் மன்னர் தீ
ஈண்டு தங்கிளை யோடுமெ ரித்திடும்
வேண்டி லின்னமிர் துந்நஞ்சு மாதலான்"

( சீவக.250)

'இகல் வேந்தர் ' என்றும் , 'அகலா தணுகாது தீக்காய்வார் போல்க' என்றும் கூறினார். அமைச்சர் முதலியோர் மிக நெருங்கின் மதியாமைக் குற்றம்பற்றித் தண்டிப்பவரும், மிக நீங்கின் மந்திரச் சூழ்வினைக்குப் பயன்படாத நிலைமையினருமான அரசர்க்கு; குளிர் காய்வார் மிக நெருங்கின் சுடுவதும் மிக நீங்கின் குளிர்போக்காதது மான தீயை, உவமித்தது மிகப் பொருந்தமான வினையுவமையாம்.