பக்கம் எண் :

பொருட்பால்
உறுப்பியல்

அதிகாரம் 89. உட்பகை

அஃதாவது, அகத்தாரே தன்னலம் நோக்கியும் கலாம் பற்றியும் தம் இனத்தாரைப் புறத்தாரான பகைவர்க்குக் காட்டிக்கொடுத்தல். இதுவும் ஒரு பகைத்திறமாதலின், பகைத்திறந் தெரிதலின் பின் வைக்கப்பட்டது.

 

நிழனீரு மின்னாத வின்னா தமர்நீரு
மின்னாவா மின்னா செயின்.

 

நிழல் நீரும் இன்னாத இன்னா- மக்கள் இன்பமாக நுகரும் நிழலும் நீரும் பின்பு நோய் செய்வனவாயின் தீயனவேயாம்; தமர் நீரும் இன்னா செயின் இன்னா ஆம்- அதுபோலத் தமக்குத்துணையாயிருக்க வேண்டிய தம்மைச் சேர்ந்தவர் இயல்புகளும் நன்மை செய்வனபோல் தோன்றித் தீமை செய்யின் தீயனவே யாம்.

தீய நிழலால் வரும் நோய் தலைவலி, காய்ச்சல் முதலாயின. தீய நீரால் வரும்நோய். யானைக்கால், பெருவயிறு (மகோதரம்) முதலாயின. தமர் என்பார் தம் குடும்பத்தாரும், தம் உறவினரும் தம் வகுப்பாரும், தம் கூட்டத்தாரும், தம் ஊராரும், தம் நாட்டாரும் தம் மொழியாரும் எனப் பல திறத்தார். முன் தோற்றத்தாலன்றிப் பின்விளைவாலேயே, பொருள்களும் மக்களும் முறையே நல்லனவுந் தீயனவும் நல்லவருந் தீயவருமாதல் அறியப்படும் என்பதாம். இக்குறளால் உட்பகையின் இயல்பு கூறப்பட்டது.