ஐந்திணை எழுபது
(மூவாதியார்)
1. குறிஞ்சி
தோழி தலைமகனை வரைவு கடாயது
1. அவரை பொருந்திய பைங் குரல் ஏனல்
கவரி மட மா கதூ உம் படர் சாரல்
கானக நாட! மறவல், வயங்கிழைக்கு
யான் இடை நின்ற புணை.
உரை
   
2. கொல்லைப் புனத்த அகில் சுமந்து, கல் பாய்ந்து,
வானின் அருவி ததும்ப, கவினிய
நாடன் நயம் உடையன் என்பதனால், நீப்பினும்,
வாடல் மறந்தன, தோள்.
உரை
   
தோழி தலைமகன் வரைவு மலிந்தமை தலைமகட்குச் சொல்லியது
3. இலை அடர் தண் குளவி வேய்ந்த பொதும்பில்,
குலையுடைக் காந்தள், இன வண்டு இமிரும்
வரையக நாடனும் வந்தான்; மற்று அன்னை
அலையும் அலை போயிற்று, இன்று.
உரை
   
தலைமகன் சிறைப்புறத்தானாக இயற்பழித்த தோழிக்குத்
தலைமகள் இயற்பட மொழிந்தது
4. மன்றப் பலவின் சுளை விளை தீம் பழம்
உண்டு, உவந்து, மந்தி முலை வருட, கன்று அமர்ந்து,
ஆமா சுரக்கும் அணி மலை நாடனை
யாமாப் பிரிவது இலம்.
உரை
   
5. சான்றவர் கேண்மை சிதைவு இன்றாய், ஊன்றி,
வலி ஆகி, பின்னும் பயக்கும்; மெலிவு இல்
கயம் திகழ் சோலை மலை நாடன் கேண்மை
நயம் திகழும் என்னும், என் நெஞ்சு.
உரை
   
புணர்ந்து நீங்கும் தலைமகனைக் கண்டு தோழி வரைவு கடாயது
6. பொன் இணர் வேங்கை கமழும் நளிர் சோலை
நல் மலை நாட! மறவல்; வயங்கிழைக்கு
நின் அலது இல்லையால்; ஈயாயோ, கண்ணோட்டத்து
இன் உயிர் தாங்கும் மருந்து?
உரை
   
பகற்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, படைத்து மொழி கிளவியால்
தோழி வரைவு கடாயது
7. காய்ந்தீயல், அன்னை! இவேளா தவறு இலள்;-
ஓங்கிய செந் நீர் இழிதரும் கான் யாற்றுள்,
தேம் கலந்து வந்த அருவி குடைந்து ஆட,
தாம் சிவப்பு உற்றன, கண்.
உரை
   
புணர்ந்து நீங்கும் தலைமகனைக் கண்டு தோழி வரைவு கடாயது
8. வெறி கமழ் தண் சுனைத் தெண்ணீர் துளும்ப,
கறி வளர் தே மா நறுங் கனி வீழும்
வெறி கமழ் தண் சோலை நாட! ஒன்று உண்டோ,
அறிவின்கண் நின்ற மடம்?
உரை
   
தலைமகன் சிறைப்புறத்தானாக, இயற்பழித்த தோழிக்குத்
தலைமகள் இயற்பட மொழிந்தது
9. மன்றத் துறுகல் கருங் கண் முசு உகளும்
குன்றக நாடன் தெளித்த தெளிவினை
நன்று என்று தேறித் தெளிந்தேன், தலையளி
ஒன்று; மற்று ஒன்றும் அனைத்து.
உரை
   
தோழி தலைமகனைக் கண்டு வரைவு கடாயது
10. பிரைசம் கொள வீழ்ந்த தீம் தேன் இறாஅல்
மரையான் குழவி குளம்பின் துகைக்கும்
வரையக நாட! வரையாய் வரின், எம்
நிரைதொடி வாழ்தல் இலள்.
உரை
   
தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகள் கேட்ப, இயற்பட மொழிந்தது
11. கேழல் உழுத கரி புனக் கொல்லையுள்,
வாழை முது காய் கடுவன் புதைத்து அயரும்
தாழ் அருவி நாடன் தெளி கொடுத்தான், என் தோழி
நேர்வளை நெஞ்சு ஊன்று கோல்.
உரை
   
தலைமகன் சிறைப்புறத்தானாக, இயற்பழித்த தோழிக்குத்
தலைமகள் இயற்பட மொழிந்தது
12. பெருங்கை இருங் களிறு ஐவனம் மாந்தி,
கருங் கால் மராம் பொழில் பாசடைத் துஞ்சும்,
சுரும்பு இமிர் சோலை, மலை நாடன் கேண்மை
பொருந்தினார்க்கு ஏமாப்பு உடைத்து.
உரை
   
வெறியாட்டு எடுத்துக்கொண்ட இடத்து, தோழிக்குத்
தலைமகள் அறத்தொடு நின்றது
13. வார் குரல் ஏனல் வளை வாய்க் கிளி கவரும்,
நீரால் தெளி திகழ், கான் நாடன் கேண்மையே
ஆர்வத்தின் ஆர முயங்கினேன்; வேலனும்
ஈர, வலித்தான், மறி.
உரை
   
தலைமகன் வரும் வழியின் ஏதத்திற்குக் கவன்ற தலைமகள் வரைவு வேட்டு,
தோழிக்குச் சொல்லியது
14. குறை ஒன்று உடையேன்மன்;-தோழி!-நிறை இல்லா
மன்னுயிர்க்கு ஏமம் செயல் வேண்டும்; இன்னே,
அரா வழங்கு நீள் சோலை நாடனை நம் இல்,
‘இரா வாரல்’ என்பது உரை.
உரை