3. முல்லை
தலைமகன் வரைவு மலிந்தது தோழி தலைமகட்குச் சொல்லியது
21. அஞ்சனம் காயா மலர, குருகிலை
ஒண் தொடி நல்லார் முறுவல் கவின் கொள,
தண் கமழ் கோடல் துடுப்பு ஈன, காதலர்
வந்தார்; திகழ்க, நின் தோள்!
உரை
   
தோழி பருவம் காட்டி, தலைமகளை வற்புறுத்தியது
22. மென் முலைமேல் ஊர்ந்த பசலை மற்று என் ஆம்கொல்?-
நல் நுதல் மாதராய்!-ஈதோ நமர் வருவர்;
பல் நிற முல்லை அரும்ப, பருவம் செய்து,
இன் நிறம் கொண்டது, இக் கார்.
உரை
   
23. சென்றார் வருவர்; செறிதொடீஇ! கார் இஃதோ,
வெஞ் சின வேந்தர் முரசின் இடித்து உரறி,
தண் கடல் நீத்தம் பருகி, தலைசிறந்து,
இன்றையின் நாளை மிகும்.
உரை
   
24. செஞ் சுணங்கின் மென் முலையாய்! சேர் பசலை தீர்; இஃதோ
வஞ்சினம் சொல்லி வலித்தார் வரு குறியால்;
வெஞ் சினம் பொங்கி, இடித்து உரறிக் கார் வானம்
தண் பெயல் கான்ற, புறவு.
உரை
   
25. கரு இயல் கார் மழை கால் கலந்து ஏந்த,
உருகு மட மான் பிணையோடு உகளும்;-
உருவ முலையாய்!-நம் காதலர் இன்னே
வருவர்; வலிக்கும் பொழுது.
உரை
   
26. இருங் கடல் மாந்திய ஏர் கொள் எழிலி
கருங் கொடி முல்லை கவின முழங்கி,
பெரும் பெயல் தாழ, பெயர் குறி செய்தார்;
பொருந்த நமக்கு உரைத்த போழ்து.
உரை
   
27. ஆயர் இனம் பெயர்த்து, ஆம்பல் அடைதர,
பாய முழங்கி, படு கடலுள் நீர் முகந்து,
மா இரு ஞாலம் இருள் கூர் மருள் மாலை-
சேயவர், செய்த குறி.
உரை
   
பருவம் காட்டிய தோழி வற்புறுத்தியது
28. அதிர் குரல் ஏறோடு அலை கடல் மாந்தி,
முதிர் மணி நாகம் அனுங்க முழங்கி,
கதிர் மறை மாலை, கனை பெயல் தாழ,
பிதிரும் முலைமேல், சுணங்கு.
உரை
   
29. கோடலம் கூர் முகை கோள் அரா நேர் கருத,
காடு எலாம் கார் செய்து, முல்லை அரும்பு ஈன,
ஆறு எலாம் நுண் அறல் வார, அணியிழாய்!
போதராய்; காண்பாம், புறவு.
உரை
   
30. அருவி அதிர, குருகிலை பூப்ப,
தெரி ஆ இனநிரை தீம் பால் பிலிற்ற,-
வரி வளைத் தோளி!-வருவார் நமர்கொல்?
பெரிய மலர்ந்தது இக் கார்.
உரை