பக்கம் எண் :

4. நீர்ப்படைக் காதை





20




மன்பெருங் கோயிலும் மணிமண் டபங்களும்
பொன்புனை யரங்கமும் புனைபூம் பந்தரும்
உரிமைப் பள்ளியும் விரிபூஞ் சோலையும்

திருமலர்ப் பொய்கையும் வரிகாண் அரங்கமும்
பேரிசை மன்னர்க் கேற்பவை பிறவும்
ஆரிய மன்னர் அழகுற அமைத்த
தெள்ளுநீர்க் கங்கைத் தென்கரை யாங்கண்
வெள்ளிடைப் பாடி வேந்தன் புக்கு


17
உரை
24

       மன்பெருங் கோயிலும் - மிகப் பெரிய மாளிகையும், மணிமண்டபங்களும் - மணிகள் பதித்த மண்டபங்களும், பொன்புனை அரங்கமும் - பொன்னால் அமைத்த நாடக சாலையும், புனைபூம் பந்தரும் - பூக்களால் புனையப்பெற்ற பந்தரும், உரிமைப் பள்ளியும் - அரசர்க்குரிய பள்ளியிடமும், விரிபூஞ் சோலையும் - மலர்ந்த பூக்களையுடைய சோலையும், திருமலர்ப் பொய்கையும் - அழகிய மலர்களையுடைய வாவியும், வரிகாண் அரங்கமும் - வரிக் கூத்தினைக் காண்டற்குரிய அரங்கும், பேர் இசை மன்னர்க்கு ஏற்பவை பிறவும் - மிக்க புகழையுடைய அரசர்க்குத் தக்கனவாகிய ஏனையவும், ஆரிய மன்னர் அழகுற அமைத்த - ஆரியவரசர் அழகுபெறச் சமைத்த, தெள்ளுநீர்க் கங்கைத் தென்கரை யாங்கண் - தெளிந்த நீரினையுடைய கங்கை யாற்றின் தென்கரை யிடத்தே, வெள்ளிடைப் பாடி வேந்தன் புக்கு - வெளியான இடத்திலுள்ள பாசறையில் அரசன் புகுந்து ;

       கோயில் - அரசனிருக்கும் மாளிகை. கங்கைத் தென்கரையாங் கண் பேரிசை மன்னர்க் கேற்பனவாகிய கோயில் முதலியன ஆரிய மன்னரால் அமைக்கப்பட்ட பாடி யென்க.