பக்கம் எண் :


4. அந்திமாலைச் சிறப்புச்செய் காதை





5


விரிகதிர் பரப்பி யுலகமுழு தாண்ட
ஒருதனித் திகிரி உரவோற் காணேன்
அங்கண் வானத் தணிநிலா விரிக்குந்
திங்களஞ் செல்வன் யாண்டுளன் கொல்லெனத்
திசைமுகம் பசந்து செம்மலர்க் கண்கள்
முழுநீர் வார முழுமெயும் பனித்துத்
திரைநீ ராடை யிருநில மடந்தை
அரைசுகெடுத் தலம்வரும் அல்லற் காலைக்



1
உரை
8

       விரிகதிர் பரப்பி - விரிந்த கதிர்களைப் பரப்பி, உலகம் முழுது ஆண்ட - உலக மனைத்தையும் ஆண்ட, ஒரு தனித் திகிரி - ஒப்பற்ற தனியாழியை யுடைய, உரவோற் காணேன் - திண்மை யுடையோனைக் காண்கின்றிலேன் ; அங்கண் வானத்து- அழகிய இடத்தையுடைய வானின்கண், அணிநிலா விரிக்கும் - அழகிய நிலாவை விரிக்கும், திங்களஞ் செல்வன் யாண்டுளன் கொல் - திங்களாகிய செல்வன் எவ்விடத்துள்ளானோ ; என - என்று, திசை முகம் பசந்து - திசையாகிய தன்முகம் பசப்பூரப் பட்டு, செம்மலர்க் கண்கள் முழுநீர் வார - செவ்விய மலராகிய கண்கள் முழுதும் நீர்வார, முழுமெயும் பனித்து - மெய்ம் முழு தும் பனித்து, திரைநீர் ஆடை இருநில மடந்தை - கடலைஆடை யாக வுடைய பெரிய நில மடந்தை. அரசு கெடுத்து அலம் வரும் அல்லற்காலை - தன் கணவனைக் காணாது நெஞ்சு கலங்கு கின்ற இடுக்கட் பொழுதிலே.

       ஞாயிற்றைப் பேரரசாகவும், புவியைக் கோத்தேவியாகவும் சிலேடை வகையால் உருவகஞ் செய்கின்றார். கதிர் - கிரணம், ஒளி. ஒரு தனித் திகிரி - ஒப்பற்ற ஒற்றைத் தேராழி, ஆக்கினா சக்கரம். செல்வன் - மைந்தன். திசை முகம் - திசையினிடம் ; திசையாகிய முகம். திசை என்றமையால் முகம் நான்கு கொள்க. பசந்து - பசு வெயிலாற் பசுமையுற்று, பசப்புற்று. மலர்க்கண்கள் முழுநீர் வார-மலரினிட மெல்லாம் கள்ளாகிய நீர் ஒழுக, மலராகிய கண்கள் முழு தும் நீர்வார. பனித்து - பனிகொண்டு, நடுக்குற்று. அரசு -கணவன். 1காலமுலகம்'' என்னுஞ் சூத்திரத்தால், ஞாயிறு திங்கள் என்பன உயர்திணையாய் இசையா எனக் கூறிய ஆசிரியர் 2."நின்றாங் கிசைத்தால் இவணியல் பின்றே'' 3இசைத்தலு முரியs வேறிடத் தான'' என்று கூறினமையின், ஈறுதிரிந்து வாய்பாடு வேறுபட்டுத் திங்களஞ் செல்வன் என்றாயிற்று. மேல் இவ்வாறு வருவனவற்றிற்கும் இதுவே விதியாமென்க. கொல், ஐயப்பொருட்டு. கெடுத்து - மறைய விடுத்து; காணப்பெறாது; 4''எற்கெடுத் திரங்கி'' என் புழிப்போல.


1. தொல். சொல். சூ. 57. 2. தொல், சொல். சூ. 58.
3. தொல.் சொல். சூ. 59, 4. மணிமே.
5 : 36.