பக்கம் எண் :

  5. இந்திரவிழவூரெடுத்த காதை

              [உலகை மூடிய இருள் அகன்றிட ஞாயிறு தோன்றிக் கதிர்களைப் பரப்பியது. அன்று சித்திரைத் திங்களில் சித்திரையும் நிறைமதியும் கூடிய நாளாக விருந்தது. புகார் நகரிலுள்ளார் இந்திர விழாச் செய்யத் தொடங்கினர். மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என இரு பகுதியையுடையது புகார் நகரம். மருவூர்ப்பாக்கத்திற் கடற்கரையை யொட்டிக் கண்ணைக் கவரும் அழகுடைய யவனர் இருப்பிடங்களும், மற்றும் வாணிகத்தின் பொருட்டுப் பல நாடுகளிலிருந்தும் வந்தோர் கலந்துறையும் இருப்பிடங்களும் விளங்குவன. வண்ணம், சுண்ணம், சாந்தம், பூ முதலியன விற்போர் திரியும் நகர வீதியும், பட்டுச் சாலியர் இருக்கு மிடங்களும், நவமணிகளும் பொன்னும் பொற்பணிகளும் விற்கும் மறுகுகளும், கூலக் கடைத் தெருவும், வெண்கலக் கன்னார், செம்பு கொட்டிகள், தச்சர், கொல்லர், தட்டார் முதலியவர்களும், குழலினும் யாழினும் ஏழிசைகளையும் வழுவின்றிசைக்கும் பாணர்களும், ஏனோரும் உறையுமிடங்களும் ஆண்டுள்ளன. பட்டினப்பாக்கத்தில் அரசவீதியும், கொடித் தேர் வீதியும், பீடிகைத் தெருவும், வாணிகர் மறுகும், மறையோர் இருக்கையும், வேளாளர் வீதியும் மற்றும் மருத்துவர், சோதிடர், சூதர், மாகதர், கூத்தர், நாழிகைக் கணக்கர், கணிகையர் முதலாயினார் இருக்கைகளும், யானை தேர் குதிரைகளைச் செலுத்துவோரும் கடுங்கண் மறவரும் பறஞ் சூழ்ந்திருக்கும் இருக்கைகளும் திகழ்வன. அவ்விரு பாக்கங்கட்கும் இடையே சோலைகளின் மரங்களே கால்களாகக் கட்டப்பட்ட நாளங்காடி யென்னும் கடைத்தெரு உளது.

          அதன்கண் உள்ள நாளங்காடிப் பூதத்திற்கு மறக்குடிப் பெண்டிர் பூவும் பொங்கலும் முதலியன சொரிந்து குரவை யாடி அரசனை வாழ்த்திச் செல்கின்றனர். பின்னர், மருவூர் மருங்கின் மறங்கெழு வீரரும், பட்டின மருங்கிற் படைகெழு மாக்களும் முந்தச் சென்று 'வேந்தன் கொற்றங் கொள்க' எனக் கூறி முரசு முழங்க உயிர்ப் பலி யூட்டுகின்றனர். அதன்பின், திருமாவளவன் முன்பு வடதிசைச் சென்று இமையத்தின் சிமையத்தில் புலியைப் பொறித்து மீண்ட காலை வடநாட் டரசர்கள்பாற் பெற்றுக் கொணர்ந்த முத்துப் பந்தர், பட்டி மண்டபம், தோரண வாயில் என்பன ஒருங்குடன் கூடிய அரும்பெறல் மண்டபத்திலும், பல திறப்பட்ட வியத்தகு செய்கைகளை யுடையனவாகிய வெள்ளிடை மன்றம், இலஞ்சிமன்றம், நெடுங்கல் மன்றம், பூத சதுக்கம், பாவை மன்றம் என்னும் ஐவகை மன்றங்களிலும் பலிகள் கொடுக்கப்படுகின்றன. பின்பு, வச்சிரக் கோட்டத்திருந்த முரசை வெள்யானைக் கோட்டத்திற் கொணர்ந்து யானையின் பிடரில் ஏற்றி விழாவின் முதலும் முடிவும் தெரிவித்து, தருநிலைக் கோட்டத்திலுள்ள கொடியை நிமிர்த்துகின்றனர். நகர வீதிகளெல்லாம் பூரண கும்பம், பொற்பாலிகை, பாவை விளக்கு முதலியவற்றால் அணி செய்யப்படுகின்றன. ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும் அரச குமரரும் பரத குமரரும் களிறு தேர் புரவிகளை ஊர்ந்து வந்து திரண்டு அரசனை வாழ்த்தி, காவிரியின் புண்ணிய நன்னீரைப் பொற் குடங்களிற் கொணர்ந்து இந்திரனை நீராட்டுகின்றனர். பின்னர்ப் 'பிறவா யாக்கைப் பெரியோன்' ஆகிய சிவபிரான் முதலாகவுள்ள எல்லாத் தேவர்களின் கோயில்களிலும் ஓமம் முதலியன செய்யப்படுகின்றன. அறவோர் பள்ளி முதலிய இடங்களிற் பெரியோர்கள் அறநெறிச் சொற்பொழிவுகள் செய்கின்றனர். யாழ்ப் புலவர், பாடற்பாணர் முதலாயினாரது இசை ஒரு பக்கம் சிறந்து திகழ்கின்றது. இவ்வாறாக இந்திர விழாவின் களிப்பு மிக்க நகர வீதியில் விழாவினிடையே, மாதவியுடன் கூடிக் களிப்புறும் கோவலன்போலப் பரத்தையரைப் பலபடப் பாராட்டிக் கூடி, அவர் பூசிய சாந்து முதலியன தம் மெய் முழுதும் பொருந்த வந்த கொழு நரை நோக்கி அவர்தம் கற்புடை மனைவியர் கடைக்கண் ]