பக்கம் எண் :

7. கானல்வரி







280




285

[ 52 ]

எனக்கேட்டு,
கானல்வரி யான்பாடத் தானொன்றின்மேல் மனம்வைத்து
மாயப்பொய் பலகூட்டு மாயத்தாள் பாடினாளென
யாழிசைமேல் வைத்துத்தன் ஊழ்வினைவந் துருத்ததாகலின்
உவவுற்றதிங்கள் முகத்தாளைக் கவவுக்கைஞெகிழ்ந்தனனாய்ப்
பொழுதீங்குக் கழிந்ததாகலின் எழுதும்என் றுடனெழாது
ஏவலாள ருடன்சூழ்தரக் கோவலன்தான் போனபின்னர்த்
தாதவிழ் மலர்ச்சோலை ஓதையாய்த்து ஒலியவித்துக்
காதலனுட னன்றியே மாதவிதன் மனைபுக்காள்
ஆங்கு,
மாயிரு ஞாலத் தரசு தலைவணக்குஞ்
சூழி யானைச் சுடர்வாட் செம்பியன்
மாலை வெண்குடை கவிப்ப
ஆழி மால்வரை அகவையா வெனவே.




276
உரை
289

        எனக் கேட்டு - என்று மாதவி பாடக் கேட்டு, கானல் வரியான் பாட - நான் கானல் வரியினைப் பாட, தான் ஒன்றின் மேல் மனம் வைத்து - அவள் அப்படிப் பாடாமல் என்னை யொழிய வேறொன்றின்மேல் மனம் வைத்து, மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள் என - வஞ்சனையுடன் கூடிய பொய்கள் பலவற்றைக் கூட்டும் மாயத்தாளாகிப் பாடினாளென்று கோவலன் எண்ணி, யாழ் இசைமேல் வைத்துத் தன் ஊழ்வினை வந்து உருத்தது ஆகலின் - யாழிசைமேல் வைத்துத் தன் ஊழ்வினை வந்து கோபித்ததாகலின், உவவு உற்ற திங்கள் முகத்தாளைக் கவவுக் கை ஞெகிழ்ந்தனனாய் - உவாநாளிற் பொருந்திய திங்கள் போலும் முகத்தினையுடைய மாதவியை அகத்திட்ட கை நெகிழ்ந்தவனாய், பொழுது ஈங்குக் கழிந்தது ஆகலின் எழுதும் என்று - பொழுது கழிந்ததாகலின் இங்கிருந்தும் எழுவே மென்று, உடன் எழாது ஏவலாளர் உடன் சூழ்தரக் கோவலன் தான் போன பின்னர் - அவள் உடன் எழாதிருக்க ஏவலாளர் தன்னைச் சூழ்ந்து உடன்வரக் கோவலன் போயினான் ; அவ்வாறு போன பின்பு, தாது அவிழ் மலர்ச் சோலை ஓதை ஆயத்து ஒலி அவித்து - தாது விரிந்த பூக்களையுடைய சோலையில் ஆரவாரத்தையுடைய ஆயத்தின் ஒலி அடங்க, கையற்ற நெஞ்சினளாய் வையத்தின் உள் புக்கு - செயலற்ற மனத்தினளாய் வண்டியினுள்ளே அமர்ந்து, காதலனுடன் அன்றியே மாதவி தன் மனைபுக்காள் - காதலனுடன் செல்லாது மாதவி தனியே தன் மனையை அடைந்தாள் ; ஆங்கு மாயிருஞாலத்து அரசு தலை வணக்கும் - அகற்சியுடைய பெரிய உலகிலுள்ள அரசர்களைத் தலைவணங்கச் செய்யும், சூழி யானைச் சுடர் வாட் செம்பியன் - முகபடாம் அணிந்த யானையையும் ஒளிபொருந்திய வாளையுமுடைய சோழனது, மாலை வெண்குடை - மாலை யணிந்த வெண்கொற்றக் குடையானது, கவிப்ப ஆழி மால் வரை அகவையா எனவே - பெரிய சக்கரவாள கிரி உள்ளகப்படும்படி கவிக்க என்று ;

        மாயத்தாளாகலின் மனம் வைத்துப் பாடினாள் என்றுமாம.்யாழிசைமேல் வைத்து - யாழிசையால் நிகழ்ந்ததென்று கருதும்படி செய்து. ஓரை யாயத்து என்று பாடமிருப்பினும் பொருந்தும். காதலனுடனன்றியே என மேற்போந்த பொருளை மீட்டும் கூறியது அவள் யாண்டும் அவ்வாறு சென்றதிலள் என்பதை யுணர்த்தற்கு. கவிப்பவெனக் கூறி மனை புக்காளென்க ; அரசனை வாழ்த்தி முடித்தல் மரபு. ஆங்கு, அசை.

        மாதவி குற்ற நீங்கிய யாழினைத் தொழுது வாங்கி இசை யெழுப்பிச் செவியாலோர்த்துப் 'பணி யாது' எனக் கோவலன் கையில் நீட்ட, அவன் அதனை வாங்கி அகப்பொருட் கருத்துக்களமைந்த ஆற்றுவரி முதலாய பாடல்களைப் பாடினான் ; அவ்வாறு பாடக் கேட்ட மாதவி அவன் தன்னிலை
மயங்கினானெனக் கருதிப் புலவியால் யாழ் வாங்கித் தானும் வேறு குறிப்பினள்போற் பாடத் தொடங்கி, அகப்பொருட் கருத்துடைய வரிப் பாடல்கலைப் பாடினாள் ; அதனைக் கேட்டுக் கோவலன் இவள் என்போலன்றி வேறொன்றின்மேல் மனம் வைத்துப் பாடினாளெனத் துணிந்து, யாழிசை மேல் வைத்து ஊழ்வினை வந்துருத்ததாகலின் அவளை யணைத்த கையை நெகிழ்ந்து ஏவலாளர் சூழப் புறப்பட்டுச் சென்றான் ; மாதவியும் கையற்ற நெஞ்சினளாய் வண்டியேறித் தனியே மனை புக்காள் ; என முடிக்க.

        இதில் ஆற்றுவரி முதலிய பலவகைப் பாடல்கள் இருப்பினும், யாவும் கானலிடத்தனவாகலின, கானல்வரி யெனப்பட்டன. இதிலுள்ளன இசைத் தமிழ்ப் பாட்டுக்களும், கட்டுரைகளும் ஆம்.

                        கானல்வரி முற்றிற்று