பக்கம் எண் :


புகார்க் காண்டம் - கட்டுரை

{ முடியுடைவேந்தர் ........ முற்றிற்று. }

        முடியுடை வேந்தர் மூவருள்ளும் - முடியுடை யரசராகிய சோழர் பாண்டியர் சேரர் என்னும் மூவருள்ளும், தொடி விளங்கு தடக்கைச் சோழர் குலத்து உதித்தோர் - வீரவளை விளங்கும் பெரிய கையையுடைய சோழர் குலத்துப் பிறந்தோருடைய, அறனும்...... என்றிவை அனைத்தும் - அறன் முதலாகப் பாணியீறாகவுள்ள அனைத்தும், பிற பொருள் வைப்போடு ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும் - ஈண்டுச் சொல்லாத பிறபொருள்களின் கிடக்கையோடு பொருந்தித் தோன்றும் ஒப்பற்ற முறைமையின் நிலைபேறும், ஒரு பரிசா நோக்கிக் கிடந்த புகார்க் காண்டம் முற்றிற்று - ஒரு படியாக நோக்கிக் கிடந்த புகார்க் காண்டம் முற்றியது.

        அடிகள் இக் காண்டத்துக் கூறிய பொருள்கள் இன்னின்ன வென இதன்கட் குறிப்பிடுகின்றார். அவற்றுள்,



அறன் அறனோம்படை (5 : 179.)
மறன் இமயத்துப் புலி பொறித்தது. (5 : 97--8.)
ஆற்றல் அமராபதி காத்தது. (6 : 14.)
மூதூர்ப் பண்பு மேம்படுதல் ஒடுக்கங் கூறாமை. (1 : 18.)
விழவு மலி சிறப்பு இந்திர விழவு (5.) விண்ணவர் வரவு (6 : 72--3.)
குடி உழவிடை விளைப்போர். (10 ; 150.)
கூழின் பெருக்கம் செந்நெற் காய்த்தலையில் கூட்டின் நெற் சொரிதல். (10 : 123--4.)
காவிரிச் சிறப்பு ''கரியவன் புகையினும்.........ஒலிக்கும்'' (10 : 102--9)
பொய்யா வானம் புதுப்புனல் பொழிதல் மழைக்கரு வுயிர்த்தல். (10 : 143.)
அரங்கும் ஆடலும் தூக்கும். (3).
வரி கண்கூடுவரி முதலிய எட்டுவரியும். (8 : 74--108)
பாரதி விருத்தி பதினோராடல் (6 : 39--63.)
திணைநிலைவரி (7 : 17--23.)
இணைநிலைவரி (7.)
யாழின் றொகுதி ''சித்திரப்படம்'' முதல் ''பட்டடை'' ஈறாகவுள்ளன. (7 : 1)
''உழைமுதற் கைக்கிளை'' முதலாயினவுமாம் (8 : 32.)
ஈரேழ் சகோடம் ''ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வி'' (3 : 70.)
இடநிலைப் பாலை ''கோடி விளரிமேற் செம்பாலை'' முதலாயின (3 : 88.)
தாரத் தாக்கம் (8 : 38.)
தான்றெரி பண் அகநிலை மருதம் முதலாயின. (8 : 39--40)
ஊரகத்து ஏர் ஊரின் வண்ணம் (5.)
ஒளியுடைப் பாணி ''வெங்கட் டொலைச்சிய விருந்திற் பாணி'' முதலாயின. (10 : 131.)

வெண்பா
(காலையரும்பி............புகார்)

காலை அரும்பி மலரும் கதிரவனும் - காலையில் உதித்து ஒளி விரியும் பரிதியும், மாலை மதியமும் போல் - மாலையில் உதிக்கும் வளருமியல்புடைய திங்களும் போல, வாழியரோ - வாழ்வதாக; வேலை அகழால் அமைந்த அவனிக்கு - கடலாகிய அகழோடு அமைந்த புவனிக்கு, மாலைப் புகழால் அமைந்த புகார் - மாலையெனப்படும் புகழோடு பொருந்திய காவிரிப்பூம் பட்டினம்.


ஆல் - ஓடு. புகார் வாழியரோ என்க.

புகார்க்காண்டம் முற்றிற்று