[அரசர் பெருமானாகிய நெடுஞ்செழியன்
தேவி தன்னுடன் அரசு கட்டிலில் துஞ்சியதை அறியாது ஆசான் முதலாயினார் ஓவியத்திரள்
போல் உரை அவிந்திருந்தனர் ; காழோர் முதலாயினார் கோயில் வாயிலில் வந்து
நெருங்கினர் ; நால் வகை வருணப் பூதங்களாகிய தெய்வங்களும் அந் நகரை விட்டு
நீங்கின ; அறவோர்கள் உள்ள இடங்களை விடுத்து, மறவோர் சேரிகளில் எரி மண்டியது
; அந்தி விழவும் ஆரண வோதையும் முதலியவை நீங்கின ; நகரின் கண் காதலனை இழந்த
துன்பத்துடன் உள்ளம் கொதித்து வீரபத்தினி மறுகு முதலியவற்றிற் சுழன்று திரிந்தனள்
; அப்பொழுது அவள்முன் எரியின் வெம்மையைப் பொறாத மதுராபதி யென்னும் தெய்வம்
வந்து தோன்றினள். (வருணப் பூதர் நால்வருடைய இயல்புகளும் இதன்கண் கூறப்பட்டுள்ளன.)]
|
|
|