பக்கம் எண் :

25

       ஆற்ற னல்லற மல்ல திலாமையால்
       ஏற்ற மல்ல திழிதக வில்லையே”

எனவரும் இராமாவதாரத்தானும் (நாட்டுப், 39)

     “மன்னவன் செங்கோன் மறுத்தலஞ்சிப் பல்லுயிர் பருகும் பகுவாய்க்
கூற்றம் ஆண்மையிற் றிரிந்து” எனவரும் (5: 215 - 20) சிலப்பதிகாரத்தாலும்,

     “மாறழிந்தோடி மறலியொளிப்ப முதுமக்கட் சாடிவகுத்த தராபதியும்”
எனவரும் விக்கிரம் சோழனுலாவாலும் (7 - 8),

      “மறனி னெருங்கி நெறிமையி னொரீஇக்
       கூற்றுயிர் கோடலு மாற்றா தாக
       வுட்குறு செங்கோ லூறின்று நடப்ப”      (4. 2; 54 - 6)

எனவரும் பெருங்கதையானும் உணர்க.

     இனி, செங்கோன்மை முறையினின்று அருளாட்சி செய்கின்ற வேந்தன்
குடை நீழலில் வாழ்பவர் மீண்டும் மீண்டும் அந்நாட்டிற் பிறத்தற்
கவாவுதலின் தடுமாற்றத்துத் தோற்றந் தன்னையும் காமுறத் தோன்றினான்
என்றார், இனி இவ்வறவேந்தனைக் கண்டோர் இத்தகைய அறவோனாய்ப்
பிறத்தல் வீடுபேற்றினும் சிறப்புடைத்து ஆதலால் மனித்தப் பிறப்பும்
வேண்டுவதே என்று தடுமாற்றத்துத் தோற்றந் தன்னையும் காமுறத்
தோன்றினான் எனினுமாம்.                                  (16)

        குற்றங் கடிதல்

17.
மண்ணுளார் தம்மைப் போல்வார்
    மாட்டதே யன்று வாய்மை
நண்ணினார் திறத்துங் குற்றங்
   குற்றமே நல்ல வாகா
விண்ணுளார் புகழ்தற் கொத்த
   விழுமியோ னெற்றி போழ்ந்த
கண்ணுளான் கண்டந் தன்மேற்
   கறையையார் கறையன் றென்பார்.

     (இ - ள்.) விண்ணுளார் புகழ்தற்கு ஒத்த - வானுலகத்தே வாழுகின்ற
தேவர்களும் புகழ்ந்து பாராட்டுதற் கேற்ற; விழுமியோன் -
சிறப்பினையுடையவனும்; நெற்றிபோழ்ந்த கண் உளான் - நெற்றியைப்
பிளந்து தோன்றிய நெருப்புக் கண்ணை யுடையவனும் ஆகிய
சிவபெருமானுடைய; கண்டம் தன்மேல் கறையை - மிடற்றின் கண்ணமைந்த
களங்கத்தை: யார் கறை அன்று என்பார் - யார் தாம் களங்கம் அன்று
என்று கூறுவார்? அங்ஙனமே; குற்றம் மண்ணுளார் தம்மைப் போல்வர்
மாட்டதே அன்று - குற்றம்