பக்கம் எண் :

  பாயிரம்11

வடமொழியில்  இராமபிரான் கதை சொல்லியவர் மூவர்; அவர்களுள்
ஆதிகவி    வான்மீகி   அருளிய  காப்பியத்தின்  வழியாலேயே  கவிச்
சக்கரவர்த்தி    இராமாவதாரக்  காப்பியத்தை நடத்துவதாக இச்செய்யுள்
சொல்லுகிறது. காப்பியக்   கதையின் பொது அமைப்பு ஆதிகாவியத்தின்
வழியதே;  எனினும்.     காப்பியக் கட்டமைப்புச் சீர்மையையும். தமிழ்ப்
பண்பாட்டு  மரபையும்    கருதிக்  கவிச் சக்கரவர்த்தி  பல மாற்றங்கள்
செய்துள்ளார்   என்பதை   மறந்திடுதல்  கூடாது.  ஆதிகவி  விரிவாக
ஓதியதைச்    சுருக்கியும்.    சுருங்கக்    கூறியதை   விரித்தும்.   சில
செய்திகளை  விடுத்தும்   புதியன   சில புகுத்தியும். செய்திகளை இடம்
மாற்றியும்  கம்பர்  தம்  காவியத்தை   இயற்றியுள்ளனர்   என்பதையும்
மனங்கொள்ளவேண்டும்.  (‘எல்லாச் சொல்லும்  பொருள்  குறித்தனவே’
என்பது  தொல்காப்பிய  விதி.   அசைச்   சொல்லாகிய  ‘அரோ’  இக்
குறிப்பினை உணர்த்துவதாகக் கொள்ளலாம்.  ‘அசை’என்பது வெற்றிடம்
நிரப்புவதாக  மட்டும்  கொள்ளலாகாது.  அசைத்தல். கட்டுதல்; கவிதை
வாசித்துச்   சொல்பவனைக்   கட்டி    நிறுத்திச்  சிந்திக்க  வைப்பது
அசைகளின் பொருண்மையுள் ஒன்று.)

வசிட்டர்     இராமபிரானுக்கு வைராக்கிய உபதேசமாகக் கூறிய நூல்
‘யோக வாசிட்டம்’;     அதில்       இராம   சரிதம்   முழுமையாகக்
கூறப்படவில்லை.   போதாயனார்   இராம  காதை  பாடினார்  என்பது
செய்தியளவாகவே   நிற்கிறது.  நூல் கிடைக்கவில்லை. கம்பர் காலத்தில்
பரவியிருந்த   வடமொழி   இராமாயணங்கள்  வான்மீக  இராமாயணம்.
அத்யாத்ம    ராமாயணம்.   சம்பு   ராமாயணம்  என்பனவே  என்பர்.
இவற்றையே   கம்பர்   தம் பாடலில் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று
கருதலாம்.    வான்மீகி.    வசிட்டர்.  போதாயனர்  என்ற  பட்டியலில்
வசிட்டருக்குப் பதிலாக வியாசர் பெயரை இணைத்துரைப்பதும் உண்டு.
                                                        10
 
 
                                   காவியம் பிறந்த களம்
 

11.

நடையின்நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை
சடையன் வெண்ணெய்நல்லூர்வயின் தந்ததே.

 

நடையின்  நின்று-நல்லொழுக்கத்தில்    நின்று;   உயர்-உயர்ந்த;
நாயகன் 
-     திருமாலின்;       தோற்றத்தின்         இடை
நிகழ்ந்த
-அவதாரங்களுக்குஇடையே  ஒன்றாக நிகழ்ந்த; இராமாவதாரப்
பேர்
-இராமாவதாரத்தைக்    குறித்தும்   புகழ்மிக்கதுமான;   தொடை
நிரம்பிய தோம்  அறு  மாக்  கதை
-செய்யுள்கள் நிறைந்த குற்றமற்ற
சிறந்த    இந்தக்   காப்பியம்;   சடையன் - வள்ளல்   சடையப்பரது;
வெண்ணெய்       நல்லூர்     வயின்
-திருவெண்ணெய்நல்லூரில்;
தந்தது
-இயற்றப்பட்டது.

இராமாவதாரம்      என்ற    பெயரில்  பாடப்பட்ட இக் காப்பியம்
தோன்றியகளம்  சடையப்பரின்    திருவெண்ணெய்நல்லூராகும் என்பது
செய்யுளின் செய்தி. நடையின்  நின்றுயர்  நாயகனாவான் இறைவனாகிய
திருமால்.  தன்  இயல்பில்    வைகுந்தத்தில்  எழுந்தருளியிருக்குங்கால்
குணங்குறி  கடந்தவனாகிய   பிரான்.  அவதாரமெடுத்து இறங்கி/இரங்கி
வரும்போது     சாத்துவீக     குணமுடையவனாகிறான்;      இதனை
உணர்த்துவது’நடையில்  நின்றுயர்  நாயகன் தோற்றம்’   என்ற தொடர்.
இராமன்  என்ற  பெயர்கொண்ட  அவதாரங்கள்  மூன்று;   பரசுராமன்
பலராமன்   ஆகியோருக்கு   இடையே  நிகழ்ந்த   அவதாரம்  தசரத
ராமாவதாரம்.

தம்மை ஆதரித்த வள்ளலாகிய  சடையப்பரை  394.  8264.  10327
ஆம் பாடல்களிலும் கம்பர் குறிப்பார்.                          11