பக்கம் எண் :

  ஆற்றுப் படலம்13

ஐம்பொறிகளும்  மாதர் கண்களும் பொதுவாகஒழுக்க நெறிகளை மீறி
நடக்கத்   தூண்டுவன;   கோசல    நாட்டின்  ஆட்சியிலே  செம்மை
இருப்பதால்  ஐம்பொறி  வாளியும்   மாதரார் கண்களும் நெறியின் புறம்
செல்லாதனவாயின.   ’நன்னடை   நல்கல் வேந்தர்க்குக் கடனே’ (புறநா.
312)  என்ற வாக்கு  நாட்டவரின்  செம்மைக்கு ஆட்சியே காரணம் என
அறிவுறுத்துதல் காண்க.

இலக்கு  நோக்கி விரைந்து பாய்தலின் ஐம்பொறிகளை வாளி (அம்பு)
என்றார்.  ஐம்பொறி வாளி. கண் எனும் அம்பும் இலக்குப்   பிழையாது
விரைந்து பாயும் இயல்பினது; இதுவும் உருவகமே.

மக்களின்     நல்லொழுக்கத்துக்கும்   தீயவொழுக்கத்துக்கும் அவர்
வாழும்   நிலத்தின்  தன்மை  காரணமாகும்    என்பர்;  கோசலத்தின்
நீர்/நிலவளமே அந்நாட்டு மக்களின் ஒழுக்க  மேம்பாட்டுக்குக் காரணம்
என்பது குறிப்பு.                                            1
 
  

13.

நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று. ஆர்கலி மேய்ந்து. அகில்
சேறு அணிந்த முலைத் திருமங்கைதன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே.
 

நீறு  அணிந்த  -  திருநீற்றைத்    திருமேனி    முழுதும்  பூசிய;
கடவுள்
-சிவபிரானின்:    நிறத்த-(வெள்ளை)  நிறத்தை உடையவனாகிய;
வான்
-மேகங்கள்;  ஆறு  அணிந்து  சென்று-போகும் வழிகளைஅழகு
செய்து கொண்டு போய்; ஆர்கலி-கடல்நீரை; மேய்ந்து-குடித்து; அகில்
சேறு    அணிந்த  முலைத்   திருமங்கைதன்
-அகிற்   குழம்பாகிய
சேற்றினால்   அழகு     கொண்ட   மார்பகத்தாளாகிய  இலக்குமியால்
ஏற்பட்ட; வீறு அணிந்தவன்  மேனியின்-தனிச் சிறப்புடையதிருமாலின்
(கரிய) நிறம் கொண்டு; மீண்டது-திரும்பின.

கடலை       நோக்கிச்    சென்றபோது  நீறு  பூசிய  சிவன்போல
வெண்ணிறம்   கொண்டு.    கடலில்   நீர்  கொண்டு  திரும்பும்போது
திருமகளால்   சீர்பெறும்     திருமால்   போலக்  கார்நிறம்  கொண்டு
மேகங்கள் இயங்கினவாம்.    கார்மேகத்தின் நிறத்துக்குத் திருமால் நிறம்
உவமையாவதை    ‘ஊழிமுதல்வன் உருவம் போல் மெய் கருத்து’ என்ற
நாச்சியார்   வாக்காலும்    அறியலாம்.  உவமைப்  பொருத்து  காண்க.
பேராசை  நிறைந்த    தன்மை பற்றிக் கடலை ஆர்கலி (ஆர்: நிறைந்த.
கலி:  ஒலி)  என்றார்;  வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்
தொகை. வான் / ஆகுபெயர்.                                  2
   

14.

பம்பி மேகம் பரந்தது. ‘பானுவால்
நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்;
அம்பின் ஆற்றதும்’ என்று அகன்குன்றின்மேல்
இம்பர் வாரி எழுந்தது போன்றதே.