பண்ணை- வயல்களில்; சேல் உண்ட ஒண் க(ண்)ணாரின்- மீன் போன்ற கண்களை உடைய பெண்களைப் போல; திரிகின்ற செங்கால் அன்னம்- திரிகின்ற சிவந்த கால்களை உடைய அன்னங்கள்; மால் உண்ட நளினப் பள்ளி- பெருமையுடைய தாமரை மலர்களாகிய படுக்கையில்; வளர்த்திய மழலைப் பிள்ளை- கிடத்திய இளங்குஞ்சுகள்; கால் உண்ட சேற்று மேதி- காலில் ஒட்டிய சேறுடைய எருமைகள்; கன்று உள்ளிக் கனைப்ப- (ஊரகத்து உள்ள) தம் கன்றுகளை நினைத்துக் கனைத்திருப்பதால்; சோர்ந்த பால் உண்டு- தானே சொரியும் பாலை அருந்தி; துயில- உறங்க; பச்சைத் தேரை தாலாட்டும்- பச்சை நிறத் தேரைகள் தம் ஒலியால் தாலாட்டுப் பாடும். அன் நடையே பொதுவாக மகளிர் நடைக்கு உவமை கூறப்படும்; இங்கே எதிர்நிலை உவமையாக மகளிர் போல் நடை பயிலும் அன்னம் என வந்தது. அன்னம் தன் குஞ்சைத் தாமரை மலர்ப் படுக்கையிலே கிடத்துகிறது. அன்னக்குஞ்சு பால் அருந்துத் துயில்கிறது. அதற்குக் கிடைத்த பால் எருமை மடியில் இயல்பாகச் சுரந்தது; சுரந்தமைக்குக் காரணம் தன் கன்றை எருமை நினைந்தது. கசிந்த மேதி கனைத்தது; கனைத்த ஒலி காரணமாகப் பால் சுரந்தது. பால் அருந்தி அன்னக் குஞ்சு துயிலத் தேரை தாலாட்டுப் பாடுகிறது! இதைப் போல நளினமான கற்பனை. முன்னே (35) ஓர் இசையரங்கு: இங்கே ஒரு தாலாட்டு; நளினம்: தாமரை. கோசல நாட்டில் எருமை கூடக் கனிந்து கசிந்து வாழ்கிறது! பாடல் கற்பனை ‘தென்னந்தமிழின்’ என்று தொடங்கும் பாடலுக்கு மூலமாய் அமைகிறது. 13 |