பக்கம் எண் :

278பால காண்டம்  

442.நஞ்சு அட எழுதலும் நடுங்கி. நாள்மதிச்
செஞ் சடைக் கடவுளை அடையும் தேவர்போல்.
வஞ்சனை அரக்கரை வெருவி. மா தவர்.
‘அஞ்சனவண்ண! நின் அபயம் யாம்’ என்றார்.
 

நஞ்சு  அட  எழுதலும்-  (பாற்கடலைக்  கடைந்த  போது)  நஞ்சு
தம்மை  அழிப்பதற்கு  எழுந்து  வர; நடுங்கி. நாள்மதிச் செஞ்சடைக்
கடவுளை அடையும்  தேவர்  போல்  
-  நடுக்கம்  கொண்டு பிறைச்
சந்திரனை    அணிந்துள்ள    சிவந்த   சடைமுடியினான  சிவபிரானை
அடைக்கலம்   அடைந்த  தேவர்களைப் போல்; வெஞ்சின அரக்கரை
வெருவி  
-   கொடுஞ் சினமுடைய அரக்கர்களுக்கு அஞ்சி; மாதவர் -
வேள்விச்   சாலையிலிருந்த முனிவர்கள் எல்லாம்; அஞ்சன வண்ண -
மை  போன்ற   நிறத்தை உடைய இராம பிரானே!; யாம் நின் அபயம்
என்றனர்
- நாங்கள் உன் அடைக்கலம் என்றார்கள்.

அட:  அழிக்க.  அடல்:   தொழிற்பெயர்.    நாள்மதி:   ஒருகலைச்
சந்திரன்.   செம்மை+சடை:     செஞ்சடை.   வெருவுதல்:   அஞ்சுதல்.
அஞ்சனம்:  மை.  வண்ணம்:   நிறம்.  பாற்கடலில் நஞ்சுஎழ.  அஞ்சிய
வேதர்கள்   சிவபெருமானை    அடைக்கலம்   அடைந்தது    போல.
அரக்கர்களுக்கு  அஞ்சிய  முனிவர்கள்  இராமபிரானை   அடைக்கலம்
அடைந்தனர் என்பது கருத்து.                                49
 

443.கவித்தனன் கரதலம்; ‘கலங்கலீர்’ என.
செவித்தலம் நிறுத்தினன். சிலையின் தெய்வ நாண்;
புவித்தலம் குருதியின் புணரி ஆக்கினன்;
குவித்தனன். அரக்கர்தம் சிரத்தின் குன்றமே.

 
  

கலங்கலீர்  என -  முனிவர்களே!  கலக்கமுறாதீர்கள் என்று  கூறி;
கரதலம்   கவித்தனன்  
-  கைகளைக் கவித்து அவர்களை அமர்த்திய
இராமபிரான்;  சிலையின்   தெய்வ   நாண்   -   தனது  வில்லின்
தெய்வீகமான  நாணை; செவித்தலம் நிறுத்தினன் - காதுவரை இழுத்து
நிறுத்தினவனாய்;  புவித்தலம்  குருதியின்   புணரி  ஆக்கினான் -
அந்தக்   காட்டினையே   இரத்தக்  கடலாக்கினவனாய்;  அரக்கர் தம்
சிரத்தின்   குன்றம்   குவித்தனன்  
-   அரக்கர்களின் தலைகளை
மலையாகக் குவித்து விட்டான்.   

கவித்தல்:     அமர்த்தல். கரதலம்: உள்ளங்கை. செவித்தலம்:  இரு
பெயரொட்டுப் பண்புத் தொகை. நாண்: கயிறு. குருதி: இரத்தம்.  புணரி:
கடல்.   சிரத்தின்  குன்றம்:  உருவகம்  கலங்காதீர்கள்  எனக்   கூறி.
கையமர்த்தி  வில்லின் நாணைக் காதுவரை இழுத்து நிறுத்தி -  அந்தக்
காட்டையே  இரத்தக்  கடலாக்கி - அரக்கர்களின் தலை  மலைகளைக்
குவித்துவிட்டான் இராமபிரான் என்பது கருத்து.                 50