பக்கம் எண் :

  அகலிகைப் படலம்305

நெஞ்சறியக் குற்றம் செய்யாத அகலிகையை ஏற்க வேண்டுமென்று
விசுவாமித்திரன் சொல்ல. அதை உணர்ந்த கௌதமனும் ஏற்கலானான்.
நெஞ்சில்   பிழைப்பிலாள்:   நெஞ்சினால்  சிறிதும்  குற்றம்  செய்ய
எண்ணாதவள்.                                           27
   

479.

குணங்களால் உயர்ந்த வள்ளல்
   கோதமன் கமலத்தாள்கள்
வணங்கினன். வலம்கொண்டு ஏத்தி
   மாசு அறு கற்பின் மிக்க
அணங்கினை அவன்கை ஈந்து. ஆண்டு
   அருந்தவனோடும். வாச
மணம் கிளர் சோலை நீங்கி.
   மணி மதில் கிடக்கை கண்டார்.*
   

குணங்களால்   உயர்ந்த  -  நற்குணங்கள்    அனைத்திலும்
மேம்பட்டவனும்; வள்ளல் -  வள்ளலுமாகிய  இராமன்;  கோதமன்
கமலத் தாள்கள்
  -   கௌதமனுடைய  தாமரைத்  திருவடிகளை;
வணங்கினன்   -   வணங்கி; வலம் கொண்டு ஏத்தி - வலமாகச்
சுற்றித்  துதிசெய்து;   மாசு   அறு   கற்பின்  மிக்க - குற்றமற்ற
கற்பினால் மிக்க;  அணங்கினை   -  அத்தெய்வப் பெண் போன்ற
அகலிகையை; அவன் கை  ஈந்து  -  அம்  முனிவனது  கையிலே
ஒப்படைத்து;  ஆண்டு அருந்தவனோடும்    -    அப்பொழுதே
அரிய   தவத்தையுடைய   விசுவாமித்திரனோடு;   வாசம்  மணம்
கிளர்
-  நறுமணம்  கமழும்; சோலை  நீங்கி  -  அச்சோலையை
நீங்கி;  மணிமதில்  கிடக்கை -  அழகிய   நவமணிகள் இழைத்த
(மிதிலா   நகரின்)   புறமதிலை;   கண்டார்  -  (அம்  மூவரும்)
பார்த்தார்கள்.  

இராமன் பண்பு:  குணங்களால்  உயர்ந்தவன்;  (அருளை  வாரி
வழங்கும்) வள்ளல். அகலிகை பண்பு: மாசறு கற்பின் மிக்க அணங்கு;
கற்பிலே குற்றம் இல்லாதவள்;  தெய்வப்  பெண் போன்றவள்; தவிர
வணங்கத் தக்கவள்.                                      28