பக்கம் எண் :

  மிதிலைக் காட்சிப் படலம்313

தற்குறிபேற்றவணி:  மகளிர் ஊஞ்சலில் அமர்ந்து வேகமாக ஆடும்
பொழுது.    அந்த    அதிர்ச்சியால்   அவர்களின்   உடம்பிலுள்ள
பூமாலைகளில் மொய்த்திருந்த  வண்டுகள்  மேலே எழுந்து பேரொலி
செய்கின்றன.   அவ்  வண்டுகள்  இப்பெண்களின்  மெல்லிய  இடை
இவ்வேகத்தைப் பொறுக்காது என்று இரக்கமுற்று வாய்விட்டு அழுவது
போலவும்    எனக்   காட்டினார்.   -   பிறப்புக்கு  ஊஞ்சலாட்டம்
ஒப்புமையாகிறது.   -கமுக   மரங்களில்   கயிறுகளைப்   பிணைத்து
ஊஞ்சலாடுவது இன்றும் வழக்கமாக உள்ளது.                   9
   

489.

வரப்பு அறு மணியும். பொன்னும்.
   ஆரமும். கவரி வாலும்.
சுரத்திடை அகிலும். மஞ்ஞைத்
   தோகையும். தும்பிக் கொம்பும்.
குரப்பு அணை நிரப்பும் மள்ளர்
   குவிப்புற. கரைகள்தோறும்
பரப்பிய பொன்னி அன்ன
   ஆவணம் பலவும் கண்டார்.*
 

வரம்பு     அறு அணியும்- அளவில்லாத இரத்தினங்களையும்;
பொன்னும்  ஆரமும்
-  பொன்னையும்  முத்துக்களையும்;   கவரி
வாலும்
-   கவரிமானின்   வாலையும்;   சுரத்திடை  அகிலும்  -
காடுகளில்   கிடைக்கின்ற    அகில்    கட்டைகளையும்; மஞ்ஞைத்
தோகையும்
- மயிற் பீலிகளையும்;  தும்பிக்  கொம்பும் - யானைத்
தந்தங்களையும்   கொண்டு;   குரம்பு    அணை  - வயல்களுக்கு
வரப்புகளாகிய கரைகளை; நிரப்பும்  மள்ளர்  -  உழவர்கள்  கட்டி
முடிக்குமாறு;  குவிப்புற  -  (குட்டுக் குட்டாகக்)  குவித்து வைக்கும்;
கரைகள் தோறும் பரப்பிய
- கரைகள் எங்கும்  பரவச்  செய்கின்ற;
பொன்னி  அன்ன  
- காவிரி நதியைப் போன்ற; ஆவணம் பலவும்
- கடைவீதிகள் பலவற்றையும்; கண்டார் - பார்த்தார்கள்.
   

கடைவீதி     - காவிரி - கடைவீதியின் இரு பக்கங்களிலும் மணி
முதலிய  பண்டங்கள்  பரவிக்  கிடப்பது காவிரியின் இருகரைகளிலும்
மலைபடு  திரவியங்கள்  குவிந்து  கிடப்பனபோல்  உள்ளன.  -‘யாறு
கிடந்தன்ன அகல் நெடுந் தெருவின்’ - மதுரைக்: 359. வரப்பு.. குரப்பு
என்பன வலித்தல் விகாரம்                                 10
   

490.

வள் உகிர்த் தளிர்க் கை நோவ
   மாடகம் பற்றி. வார்ந்த
கள் என நரம்பு வீக்கி.
   கையொடு மனமும் கூட்டி.
வெள்ளிய முறுவல் தோன்ற.
   விருந்து என மகளிர் ஈந்த