மகளிர் - அந்நகரத்துப் பெண்கள்; வள் உகிர்த் தளிர்க்கை - கூர்மையான நகங்களையுடைய தளிர்போன்ற மெல்லிய (தம்) கைவிரல்கள் வருந்தும்படி; மாடகம் பற்றி - வீணையின் முறுக் காணிகளைப் பிடித்துத் திருகி; வார்ந்த கள்ளென - ஒழுகும் தேன் தாரை போன்ற; நரம்பு வீக்கி - அந்த யாழ் நரம்பை இறுக்கமாகக் கட்டி; கையொடு மனமும் கூட்டி - (அந்த நரம்புகளின் மேல் வருடச் செல்கிற) கைவிரல்களின் குறிப்புடனே மனத்தையும் பதியச் செய்து; வெள்ளிய முறுவல் தோன்ற - (தம்) வெண் முறுவல் வெளிப்பட; விருந்து என ஈந்த - (புதிதாக வந்தவர்க்குச்) சுவையான உணவு வழங்குதல் போல கொடுத்த; தெள்விளிப் பாணி - தெளிந்த இசையோடு கூடிய பாட்டு (என்னும்); தீம்தேன் - இனிய தேனை; செவி மடுத்து - இரு காதுகளாலும் கேட்டு; இனிது சென்றார் - (அம்மூவரும்) இன்புற்றுச் சென்றார்கள். வீணையும் விருந்தும் - வீணைவாசிப்போர்க்கு அவ் வாசிப்பால் இயல்பாக மனமகிழ்ச்சியைக் காட்டும் இனிய பார்வையும் புன்னகையும் தோன்றும். இதனை. விருந்தினரை இனிது நோக்கிப் புன்னகை பூத்து உபசரிக்கும் செயலாக அமைந்துள்ளமையைக் காணலாம். யாழ் உறுப்புகள்: கோடு. பத்தர். ஆணி. நரம்பு. மாடகம். மாடகம்: நால் விரல் அளவான பாலிகை வடிவாய் நரம்பை இறுக்கும் கருவி. பாணித் தீம்தேன்: நாவுக்கு இனிமை தரும் தேன் போலக் காதுக்கு இனிமை தரும் பாட்டு. விளிப்பாணி: வாய்ப்பாட்டு இசை. 11 |