சந்திரனை வென்றானும் - சந்திரனை வெற்றிகண்ட ஒரு மன்னனும்; உருத்திரனைச் சாய்த்தானும் - உருத்திர மூர்த்தியைத் தோற்கடித்த ஓர் அரசனும்; சுடுசரத்தால் - (பகைவரை எரிக்கவல்ல) அம்பினால்; துந்து எனும் தானவனை - துந்து என்னும் அசுரனை; துணித்தானும் - கொன்ற வேந்தனும்; வந்த குலத்திடை - இக்குமாரர்கள் பிறந்த இச் சூரிய வம்சத்தில்; வந்த ரகு என்பான் - தோன்றின இரகு என்னும் அரசன்; வரிசிலையால் - கட்டமைந்த வில்லால்; இந்திரனை வென்று - தேவேந்திரனை வென்று; திசை இருநான்கும் - எட்டுத்திசைகளில் உள்ளவரையும்; செரு வென்றான் - போரில் தோற்கடித்து வெற்றி பெற்றான். சந்திரன் சார்பான அசுரர்களுக்கும் பிருகஸ்பதியின் சார்பான தேவர்களுக்கு போர் நடக்குங் கால் தேவர்கள் சூரியவம்சத்தவனாகிய திலீபன் உதவியை நாடினர். அம் மன்னன் அசுரர்களைக் கொன்று சந்திரனை வென்றான். பகீரதன் அசுவமேதம் பரியை விடுத்தான்; ஆறுமுகன் அப் பரியைக் கவர்ந்து சென்றான்; தன்னை எதிர்த்த உருத்திர மூர்த்தியோடு போர் செய்து வென்றான். உதங்க முனிவருக்குப் பகைவனான துந்து என்னும் அசுரனைக் குவலயாசுவன் என்பவன் கொன்றான். இரகு மன்னன் இந்திரனுக்குரிய கீழ்த் திசை உட்பட அனைத்துத் திசையெங்கும் சென்று வெற்றிகண்டான். இவன் பெயரால் இக்குலத்திற்கு ‘ரகுகுலம்’ என்றும். இக் குலத்தில் தோன்றிய இராமனுக்கு ‘இராகவன்’ என்றும் பெயர்கள் வழங்கலாயின. 11 |