அவ்வுரை கேட்டு- (தசரதன் கூறிய) அந்த வார்த்தையைக் கேட்டு; அம் முனியும் - அந்த ருசிய சிருங்க முனிவனும்; அருள் சுரந்த - கருணை பொழிந்த; உவகையனாய் - மகிழ்ச்சியுடையவனாகி; (அவ்வரசனை நோக்கி); இவ்வுலகம் அன்றியே - இந்த நிலவுலகம் ஒன்றை மாத்திரம் அல்லாமல்; எவ் உலகும் - எல்லா உலகங்களையும்; இனிது அளிக்கும் - இனிதாக (எளிதில்) காத்திடும் படியான; செவ்வி இளஞ்சிறுவர்களை - அழகிய இளைய மைந்தர்களை; தருகின்றேன் - (உனக்கு நான் இப்பொழுது) கொடுத்திடுவேன்; இனி - இனிமேல்; தேவர் வவ்வி நுகர்- தேவர்கள் (அவிசுகளைப் பெற்று உண்ணக் கூடிய; பெருவேள்விக்கு - பெரிய யாகத்தைச் செய்வதற்கு; உரிய எலாம் - வேண்டிய பொருள்கள் யாவும்; வருக என்றான் - (இங்கு) வந்து சேரட்டும் என்று சொன்னான். தருகின்றேன் - விரைவும் தெளிவும் குறித்து எதிர்காலம் நிகழ்காலமாக மயங்கிற்று. ‘எவ்வுலகும் இனிது அளிக்கும்’ - காத்தல் தொழிலுக்கு உரிய திருமாலின் அம்சமானவர் என்பது அறியப்பெறுகிறது. 17 |