மறை நான்கும் அனையார்கள்- நான்கு வேதங்களையும் ஒத்துள்ள அந்தக் குமாரர் நால்வரும்; தலையாய - முதன்மையான; பேருணர்வின் - செய்திகளையெல்லாம் அறியக் கூடிய முதிர்ந்த அறிவில்; கலை மகட்குத் தலைவராய் - கலைமகளுக்கும் மேம்பட்டவராய்; சிலை ஆயும் - வில் திறத்தை ஆராய்ந்து கூறுவதான; தனுவேதம் - தனுர் வேதமானது; தெவ்வரைப் போல் பணி செய்ய - (தம்முடைய) பகைவர் (தோற்றுத் தம்மிடம் குற்றேவல் செய்வது) போலத் தமக்குக் குற்றேவல் செய்யுமாறு; கலை ஆழிக் கதிர்த் திங்கள் - கலைகள் நிறைந்த வட்டவடிவமான ஒளியையுடைய முழு நிலவின்; உதயத்தில் கலித்து- உதய காலத்தில் ஒலித்து; ஓங்கும் - பொங்குகின்ற; அலை ஆழியென - அலைகளையுடைய கடல்கள் போல; வளர்ந்தார் - வளர்ந்து வந்தார்கள். மறை நான்கும் அனையார்கள் - அறம் முதலான நாற்பொருட் பயன்களையும் அளிக்கும் தன்மையர் எனலாம். தம் ஆசிரியர் முன்னிலையில் தம் அறிவாகிய அலைகள் பொங்கிக் காணக் கலைப் பயிற்சி பெற்று அக்குமாரர் வளர்ந்தனர் என்பதைத் திங்கள் உதயத்தில் கலித்தோங்கும் அலையாழி என்னும் தொடரால் குறித்தார். 23 |