இவன் - இந்த இராமனது; போது நின்றது என - செந்தாமரை (வாடி வதங்காமல் எப்பொழுதும் ஒரு தன்மையாகப் பொருந்தி நின்றது) என்னுமாறு; பொலிந்த - விளங்குகின்றன; பொலன் கழற்கால் - பொற்கழலை யணிந்த திருவடியின்; பொடி - தூளியே; கோதமன் தன் பன்னிக்கு - கௌதம முனிவனின் மனைவியான அகலிகைக்கு; முன்னை உரு - பழைய வடிவத்தை; கொடுத்தது கண்டாய் - (சாபம் நீக்கி) தந்து அருளியதைக் காண்பாய்; என்தன் உயிர் மேலும் - எனக்கு (எனது) உயிரிடத்து உள்ளதைக் காட்டிலும்; இக்கரியோன்பால் - கரிய இந்த இராமனிடத்தில்; காதல் உண்டு - அன்பு மிகுதியாக உள்ளது; இவன்தன் வரலாறும் - இந்த இராமனது தூய வரலாறும்; புய வலியும் - தோள் ஆற்றலும்; ஈது என - இதுவாம் என்று; உரைத்தான் - (கோசிக முனிவன் சனகனுக்குத் தசரதன் மகனான இராமனது பண்புகளைக்) கூறி முடித்தான். இராமனது திருவடி கூடப் பெருமைமிக்கது என்றால் இவன் திருமேனியின் பெருமை கூறல் வேண்டா என்பது இராமன்: கரிய நிறம் உடையவன். அதனால் இராமனைக் ‘கரியோன்’ என்றார். ‘இவ்வளவு பெருமைமிக்க இராமனிடம் என் உயிரினும் எனக்கு அன்பு மிகுதியாக உள்ளது’ என்றான் விசுவாமித்திரன் பன்னி - பத்நீ என்பதன் திரிபு. காதல் - பத்திமை. ‘காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன்’ - திருமாலை - 26. 29 |