பக்கம் எண் :

432பால காண்டம்  

679.‘தாளுடை வரி சிலை. சம்பு. உம்பர்தம்
நாள் உடைமையின். அவர் நடுக்கம் நோக்கி. இக்
கோளுடை விடை அனான் குலத்துள் தோன்றிய
வாளுடை உழவன் ஓர் மன்னன்பால் வைத்தான்.

 
  

சம்பு    - (தன் சினம் மாறிய) சிவன்; அவர் நடுக்கம் நோக்கி -
தேவர்கள்  அஞ்சி   நடுங்குவதைப்  பார்த்து;  உம்பர்தம்  நாள்  -
அத்தேவர்கள் வாழ்நாட்கள்; உடைமையின் - நீண்டு  இருந்தமையால்;
தாள்உடை  
-  வலிய அடித்தண்டையுடைய; வரிசிலை - கட்டமைந்த
அவ்வில்லை; இக்கோள்  உடை - வலிமையுடைய; விடை அனான் -
இந்தக்  காளை போன்ற சனகனது; குலத்துள் தோன்றிய - குலத்திலே
பிறந்த; வாள் உடை உழவன் - வாளாகிய ஏர் கொண்டு உழுபவனான;
ஓர் மன்னன்பால்
- ஓர் அரசனிடத்தில்; வைத்தான் - கொடுத்தான்.  

சிவன்     அந்த   வில்லைத் தேவராதனிடம் கொடுத்து வைத்தான்.
‘வில்லேர்   உழவர்’  என்றாற்போல  ‘வாளுடை   உழவன்’  என்றார்.
‘வாளேருழவன்’  - புற. 368.  ‘வில்லேர் உழவர்’ ‘சொல்லேர் உழவர்’ -
திருக். 882.                                                14
 

680.‘கார்முக வலியை யான் கழறல் வேண்டுமோ?
வார் சடை அரன் நிகர் வரத! நீ அலால்.
யார் உளர் அறிபவர்? இவற்குத் தோன்றிய
தேர் முக அல்குலாள் செவ்வி கேள்’ எனா.
 

கார்முக     வலியை- இந்த வில்லின் வலிமையை; யான் கழறல்
வேண்டுமோ
- நான் எடுத்துக் கூற வேண்டுமோ?; வார் சடை அரன்
- நீண்ட சடைமுடியுடைய சிவபிரானை; நிகர்வரத - ஒத்த முனிவனே!;
நீ  அலால்  
-  உன்னையல்லாமல்;  அறிபவர் - (இதன் வலிமையை)
உண்மையாக  அறியக்  கூடியவர்;  யார்  உளர் - யார் இருக்கின்றார்
(யாருமில்லை);   இவற்கு  -  இந்தச்  சனகராசனுக்கு;  தோன்றிய -
(மகளாகப்)  பிறந்த;  தேர்முக  அல்குலாள் - தேர்த்தட்டுப் போன்ற
அல்குலையுடைய   சீதையின்;   செவ்வி   -  வரலாற்றை;  கேள் -
கேட்பாயாக; எனா - என்று சொல்லி.

கார்முக     வலியை நான் சொல்ல வேண்டுவதில்லை. ? ஏனெனில்.
அதை   அறுபதினாயிரம்   பேர்   சுமந்து   வந்ததை   நீரே  நேரில்
கண்டதால்  அதன்  வலிமை  உமக்குத்  தெரியும்.  வில்லை  அளித்த
சிவபெருமான்   அனைய   நீயே     அவ்வில்லை   வளைப்பிக்கவும்.
சானகியின்    திருமணத்தை    நிறைவேற்றி     வைக்கவும்   அருள்
புரியவேண்டும்   என்பது.   ‘வார்சடை  அரன்  நிகர்   வரத’  என்ற
விளியால் உணர்த்தப் பெறுகிறது - கருத்துடையடைகொளியணி.     15