மல் வலான்- மற்போரில் வல்ல சனக மன்னன்; அவ் உரை பகர - அந்த மொழிகளைச் சொல்ல; மாதவன் - விசுவாமித்திரன்; ஒல்லையில் அவனும் - விரைவில் அத் தசரதனும்; வந்து உறுதல்- இங்கு வந்து சேருதல்; நன்று என - நலமாகும் என்று தெரிவிக்கவே; எல்லையில் உவகையான் - எல்லையற்ற மகிழ்ச்சி கொண்ட சனகன்; இயைந்த ஆறு எலாம் - இங்கே நடந்த செய்திகளையெல்லாம்; சொல்லுக என்று - (தசரத மன்னனிடம்) சொல்லுக என்று கூறி; ஓலையும் தூதும்- திருமண ஓலையையும் தூதுவரையும்; போக்கினான் - (அயோத்திக்கு) அனுப்பி வைத்தான். திருமணத்தை நாளோட்டாமல் விரைவில் செய்யவேண்டு மென்பது முறையாகும். ஆயினும். பெற்றோரின் அனுமதியில்லாமல் திருமணத்தை நடத்துவது முறையன்று என்று கருதிய விசுவாமித்திரன் ‘ஒல்லையில் அவனும் வந்துறுதல் நன்று’ என்றான். 66 |