கற்பின் அருந்ததி கணவன் - கற்புடைய அருந்ததிக்குக் கணவனான வசிட்ட முனிவன்; செவி வயின் - (தம்) செவி மூலமாக; அமுதக் கேள்வி - அமுதம் போல் இனிய நூற் கேள்விகளை; தெவிட்டினார் - தெவிட்டும் அளவிற்கு மிகுதியாகக் கேட்டவர்களும்; தேவர் நாவின் - தேவர்கள் நாவினால்; அவிகையின் - சுவைக்கின்ற அவிசைத் தம் கைகளால்; அளிக்கும் நீரார் - கொடுக்கும் இயல்புடைய அந்தணர்களும்; ஆயிரங்கோடி சூழ - ஆயிரவர் தன்னைச் சுற்றிவர; கவிதையின் நீழல்- குடை நிழலிலே; வெள்ளைச் சிவிகையின் - வெண்மையான பல்லக்கிலே; அன்னம் ஊரும் - அன்ன ஊர்தியிலே ஏறிச் செல்லும்; திசைமுகன் என்ன - நான்முகன் போல; சென்றான் - போனான். அருந்ததி கணவனான வசிட்டன் ஆயிரங்கோடி அந்தணர் சூழக் கவிகையின் நீழலில் வெள்ளைப் பல்லக்கில் நான்முகனைப் போலச் சென்றான் என்பது. ஆயிரங்கோடி - பலர். வெள்ளைச் சிவிகையில் செல்லும் வசிட்டனுக்கு வெள்ளையன்னத்தில் செல்லும் நான்முகன் ஊர்தியாலும் தொழிலாலும் ஒப்பாவன். 70 |