முத்து - முத்துக்களினாலும்; அணிவயிரம் - அழகிய வயிர மணிகளாலும்; பூணான் - இயன்ற அணிகளைப் பூண்டவனான தசரதன்; நித்திய நியமம் முற்றி - (தன்) நித்தியக் கடமைகளை முடித்துவிட்டு; நேமியான் பாதம் - சக்கரம் ஏந்திய திருமாலின் பாதங்களை; சென்னி வைத்தபின் - (தன்) முடியிலே வைத்த பின்பு; (குலதெய்வமான திருமாலை வணங்கின பின்னர்); மறை வல்லோர்க்கு - வேதங்களில் வல்ல அந்தணர்களுக்கு; வரம்பு அறு - எல்லையற்ற; மணியும் பொன்னும் - இரத்தினமும் பொன்னும்; பத்தி ஆன் நிரையும் - வரிசையான பசுக் கூட்டங்களையும்; பாரும் - பூமியையும்; பரிவுடன் - மன மகிழ்ச்சியோடு; நல்கி - தானம் செய்து; மங்கலம் முகிழ்த்த- மங்கலம் மலர்ந்த; நன்னாள் - நல்ல நாளில்; போனான்- புறப்பட்டுச் சென்றான். அரசர்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் இரத்தினம். பொன். பசு. பூமி முதலியன தானம் செய்தல் மரபு. திருவடியைச் சென்னியில் வைத்தல் என்பது வீழ்ந்து வணங்குதலாகும். 72 |