பக்கம் எண் :

  வரைக்காட்சிப் படலம்545

868.

திமிர. மா உடல் குங்குமச் சேதகம்
திமிர. மாவொடும் சந்தொடும் தேய்க்குமால்;
அமர மாதரை ஒத்து ஒளிர் அம் சொலார்
அமர. மா தரை ஒத்தது. அவ் வானமே.
 

திமிர     மா உடல் -  இருள் போன்ற கரிய நிறமுடைய காட்டுப்
பன்றிகள்  (தம்)  உடலிலே;  குங்குமச்  சேதகம்  - மகளிர் ஊடலில்
அழித்தெறிந்த  குங்குமச்   சேறு; திமிர - நிரம்பியதனால்; மாவொடும்
சந்தொடும்   
-   (அச்   சேறு   நீங்கும்படி)  மாமரத்திலும்.  சந்தன
மரத்திலும்;  தேய்க்கும்  -  (தம்  உடம்பை) உராயச் செய்யும்; அமரர்
மாதரை  
-  (அந்த  இடத்தில்)  தேவ  மாதரை;  ஒத்து  ஒளிர் அம்
சொலார்  
-  ஒப்ப விளங்கும்  இனிய சொல்லையுடைய மகளிர்; அமர
மா  தாரை
- பொருந்தியிருப்பதால்  அந்தப் பெரிய மலை நிலமானது;
அவ்   வானமே   ஒத்தது  
-  தெய்வப்  பெண்கள்  தங்கும்  அந்த
வானுலகம் போன்றது.

கரும்     பன்றி    தன்    உடலில்   பட்ட  குங்குமச்  சேற்றைப்
போக்குவதற்காக  மாமரத்திலும்  சந்தன  மரத்திலும்  தேய்க்கும்.  தேவ
மங்கையரை   ஒத்த   பெண்கள்  அங்கு   வாழ்வதால்  அம்   மலை
தேவருலகம் போன்று இருக்கும் என்பதாம்.                      26
 

869.

பேர் அவாவொடு மாசுணம் பேர. வே
பேர. ஆவொடு மா சுணம் பேரவே!
ஆர ஆரத்தி னோடும் மருவியே
ஆர வாரத்தின் ஓடும் அருவியே!

 

மாசுணம்     - பெரும் பாம்புகள்; பேர் அவாவொடு - (இரையை
விரும்பியதனால்)   மிகு  விருப்புடன்; பேர - பெயர்ந்து செல்வதனால்;
வே  பேர  
-  மூங்கில்கள் அடி  பெயர்ந்து இற்றுவிழ; ஆவொடு மா
சுணம்  பேர  
-  (அது   கண்டு  அஞ்சிய) காட்டுப் பசுக்கள் ஓடவும்.
(அதனால்  எழுந்த)  பெரும்   புழுதி  பறக்கவும் (ஆயின) ; அருவி -
(அம்மலையில்   உள்ள)   நீரருவிகள்;   ஆர   ஆரத்தினோடும்  -
மிகுதியான முத்துக்களோடும்; மருவி- கலந்து; ஆரவாரத்தின் ஓடும் -
பேரொலியுடன் ஓடிக் கொண்டிருக்கும்.

மலையின்     ஒருபுறத்தில்  புழுதி பறக்கின்றது. மற்றொரு புறத்தில்
அருவி  ஓடுகின்றது. இவ்வாறு  மலையின்  சிறப்புக் கூறப்படுகிறது. வே:
மூங்கில். சுணம்: சுண்ணம். புழுதி.                            27