கண்ணுளர் - கூத்தர் இயைந்த; ஆடல்தோறும் - ஆடு களங்களில் எல்லாம்; மண்ணும் முழவு - மார்ச்சனை அமைந்த மத்தளத்தின்; இன் ஒலி - இனிய ஓசையும்; மங்கையர் - ஆடலுக்கு இசைய பாடல் பாடும் மங்கையர்தம்; பாடல் ஓதை - கலத்தோடு (இசைக் கருவிகள்) பொருந்த அமைந்த கண்டத்து (மிடற்றுப்) பாடல் ஓசையும்; பண்ணும் - சுருதி சுத்தமாக அமைய வேண்டி முடுக்கி அமைக்கப் பட்ட; நரம்பின் - நரம்புக் கருவிகளில்; பகையா இயல் ஓதை - பகை நரம்பில் விரல் மறந்தும் பதியாவாறு அமைய எழும் ஓசையும்; பாணி - தாளம் ஒத்து அமைந்த ஓசையும்; கண் - தொளைகள்; உடைவேய் - நன்கு அமைக்கப் பெற்ற புல்லாங்குழல்களின் ஒலியும் ஆகிய இவை எல்லாம்; விண்ணும் மருளும்படி - தேவலோகத்தவரும் கேட்டு. கண்டு மருளும்படி; விம்மி - மிக்கு; எழுந்த - எழுந்தன. தேவசாதியர் தம்முள் ஒரு வகையர் கின்னரர். இவர்கள் யாழ்த்திறம் வல்லவர். தேவர்கள் ஆடல். பாடல். மகளிர் நலம். நுகர்தல் இவற்றில் மிக்க ஆர்வத்தினர். அத்தகையரே அயோத்தி மக்கள் தம் ஆடல். பாடல் காண கேட்க நேரின் மருள்வர் என்பதாம். மார்ச்சனை: முழவிற்கு இடப்படும் ‘ரவை’ - இயைந்து பாடுங்கால் மிடற்றொலி எது? கருவி ஒலி எது? எனப் பிரிந்து அறிதல் எஃகுச் செவியர்க்கும் எளிதன்றாம். நரம்புக் கருவிகளை இயக்கு முறைகள் வார்தல். வடித்தல் முதலிய எண்வகை என்ப (சிலம்பு). 44 |