பக்கம் எண் :

584பால காண்டம்  

கலிவிருத்தம்
 

924.

‘ஊக்கம் உள்ளத்து உடைய முனிவரால்
காக்கல் ஆவது. காமன் கை வில்’ எனும்
வாக்கு மாத்திரம்; அல்லது. வல்லியில்
பூக் கொய்வாள் புருவக் கடை போதுமே!
 

‘உள்ளத்து  ஊக்கம் உடைய - (தவம் புரிவதில்) மனத்தில் ஊக்கம்
(மிகக்)  கொண்ட; முனிவரால் - முனிவர்களிடத்தில்; காமன் கை வில்
காக்கல்  ஆவது  எனும்
- காமன் வில்லின் ஆற்றலைக் காக்கத் தக்க
ஆற்றல்  உண்டு என்று  (உலகில்) சொல்லப்படுகின்ற; வாக்குமாத்திரம்
அல்லது  
-  வாய்ச்   சொல்மட்டும்  (பிரபலமே)  யன்றி (உண்மையை
ஆராய்ந்தால்   அம்முனிவர்களின்    ஆற்றலைப்   பொடியாக்குதற்கு);
வல்லியில்   பூக்கொய்வாள்   
-  பூங்கொடிகளிலிருந்து   பூக்களைக்
கொய்யும்  ஒருத்தியின்;  புருவக்  கடைபோதும் - புருவத்தின் நுனிப்
பகுதியின் கடைப் பார்வையே போது மானதாகும்.

முனிவரால்  - உருபு மயக்கம். “கண்களவு கொள்ளும் சிறு நோக்கம்
காமத்தின்   செம்பாகம்   அன்று  பெரிது”  (திருக்.  1092)  ஆதலின்.
முனிவர்களின்   தவமுயற்சியை   யழிக்கப்   புருவ   வில்லை  மகளிர்
முழுதும்  வளைக்கத்   தேவையின்றிக்   கடைப்பகுதியின்   வளைப்பே
போதுமென்பார்.   “புருவக்கடை   போதுமே”  என்றார்  -  ஏ- அசை.
“கறையடிக்  களி  யானையின்  வரவினைக்  கண்டு.  மறுகின்  உற்றவர்
இரிதர  மணி  மருங்கிடல்  போல்.  உறு தவத்தினர்  அறிந்தனர்  ஓட
ஒண்ணுதற்கு.  நறு மலர்ப் பதத்து அணிந்தனள்  சிலம்பு  ஒரு  நங்கை”
(பிரபு. லீலை) எனும் பாடல் ஒப்பு நோக்கற்பாலது.                35
 

925.

நாறு பூங் குழல் நன்னுதல். புன்னைமேல்
ஏறினான் மனத்து உம்பர் சென்று. ஏறினாள்;-
ஊறு ஞானத்து உயர்ந்தவர் ஆயினும்.
வீறு சேர் முலை மாதரை வெல்வரோ!

 

நாறு     பூங்குழல்  நன்னுதல் -  மணக்கின்ற  பூக்களையணிந்த
கூந்தலையும்    அழகிய    நெற்றியையும்     உடையாள்    ஒருத்தி;
புன்னைமேல்  ஏறினான்  
-  புன்னை  மரத்தின்  மீது  (பூக்கொய்ய)
ஏறியுள்ள  தன்  கணவனுடைய;  மனத்து உம்பர் சென்று ஏறினாள்-
மனத்தின்  மீது  ஏ?றி அமர்ந்திருந்தாள்; ஊறு ஞானத்து உயர்ந்தவர்
ஆயினும்  
-  மனத்தில்  ஊற்றாய்ச்  சுரக்கின்ற   அறிவினைப் பெற்ற
உயர்ந்தோர் ஆனாலும்; வீறுசேர்  முலை  மாதரை  வெல்வரோ? -
பெருமைமிக்க     தனங்களையுடைய    பெண்டிரை   வெல்லவல்லவர்
ஆவரோ? (ஆகார் என்க.)

அவன்     புன்னை மேல் ஏறினான்.  இவளோ அவன் உள்ளத்தின்
மேல்  ஏறினாள்.  உருவுடைய  மரத்தின்   மேல்  ஏறலினும்  உருவற்ற
உள்ளத்தின்