ஏயும் தன்மையர் - (இதுகாறும் கூறியவாறு பூக்கொய்தலும் புலவி கொள்ளுதலும் முதலிய) செய்கைகளை மேற்கொண்டவர்களான; இவ் வகையார் எலாம் - இத்தகைய ஆடவரும் பெண்டிரும்; தூய தண் நிழல் சோலை - தூய்மையுடைய குளிர்ந்த நிழலைத் தரும் அச்சோலையிலே; துறுமலர் வேயும் செய்கை வெறுத்தனர் - நெருங்கிய மலர்களைப் (பறித்துச்) சூடுகின்ற செயலின்மேல் விருப்பமில்லாதவர் ஆயினர்; வெண்திரை பாயும் தீம்புனல் பண்ணை - வெள்ளை அலைகள் பாயும் இனிய நீரில் விளையாடுவதில்; சென்று எய்தினார் - (மனம்) சென்றதனால் (நீர்நிலைகளை) அடைந்தார்கள். துறுமலர் - வினைத்தொகை. புனல்பண்ணை: நீர்விளையாட்டு. பழகப் பழகப் பாலும் புளிக்கும் ஆதலின் மலர்வேயும் செய்கையும் வெறுத்தனர் என்றார். செயல்மாற்றம் சோர்வு மாற்றும் ஆதலின் பூக் கொய்தோர் இனிப் புனல் விளையாடப் போகின்றனர் என அடுத்தப் படலத்துக்குத் தோற்றுவாய் அமைத்தார். 39 |