பக்கம் எண் :

  நீர்விளையாட்டுப் படலம்603

952.கதம்ப நாள் விரை. கள் அவிழ் தாதொடும்
ததும்பு. பூந் திரைத் தண் புனல் சுட்டதால்-
நிதம்ப பாரத்து ஒர் நேரிழை. காமத்தால்
வெதும்புவாள் உடல். வெப்பம் வெதுப்பவே!
 

காமத்தால்      வெதும்புவாள்    -     காம     வெப்பத்தால்
வெதும்புகின்றவளும்;  நிதம்ப  பாரத்து  ஓர்  நேரிழை  -  நிதம்பச்
சுமையைத் தாங்கியவளும்  அழகிய  அணிகளை  அணிந்தவளும் ஆன
ஒருத்தியின்;  உடல்  வெப்பம்  வெதுப்ப  - உடம்பின் (காம) தாபம்
சுட்டதனால்; கதம்ப நாள்  விரை  கள்ளவிழ்  தாதொடு - பல்வகை
மணப்பொடிகள்  கொண்டவையும்.  அன்று   மலர்ந்தவையும்    மணங்
கூடியனவுமாகி.  தேன்  சிந்தும்  மகரந்தங்களோடும்;   ததும்பு  பூ  -
நிரம்பியுள்ள    மலர்களைக்   கொண்ட;   திரைத்   தண்புனல்   -
அலையடிக்கும்   (அந்தக்)  குளிர்ந்த  நீர்த்  தடாகமும்;   சுட்டது  -
வெப்பம் மிக்கதாய்ச் சுட்டது.

நேரிழை:   அன்மொழித் தொகை. “நீருட் குளிப்பினும் காமம் சுடும்;
குன்றேறி   ஒளிப்பினும்   காமம்   சுடும்”   (நாலடி.  90).  ஆதலால்.
மலர்களால் குளிர்ந்த ஒரு பெரும் நீர்த்தடாகம்.  ஒருத்தி  வெப்பத்தால்
கொதித்தது எனக் காம நெருப்பின் தீமை  தெரிவித்தவாறு.  காமத்தைத்
தீ  எனக்  கூறுதல்  மரபு.  “நீங்கில்   தெறூஉம்.   குறுகுங்கால்  தண்
என்னும்  தீ  யாண்டுப்  பெற்றாள்   இவள்?”   (திருக்.  1104) என்பார்
வள்ளுவனாரும்.                                            24
 

953.தையலாளை ஒர் தார் அணி தோளினான்.
நெய் கொள் ஓதியின் நீர் முகந்து எற்றினான்-
செய்ய தாமரைச் செல்வியை. தீம் புனல்.
கையின் ஆட்டும் களிற்று அரசு என்னவே!
 

செய்ய     தாமரைச் செல்வியை - சிவந்த தாமரையில் உறையும்
திருமகளை;  கையின்  தீம்புனல் ஆட்டும் - (தன்) கையினால் இனிய
நீரை   (மொண்டு   நீர்   ஆட்டும்);  களிற்றரசு  என்ன  -  ஆண்
யானைகளின் அரசைப் போல; ஓர் தாரணி தோளினான் - மலர்மாலை
யணிந்த   தோளுடையான்   ஒருவன்;  நீர்  முகந்து  -   தண்ணீரை
மொண்டு;  தையலாளை  நெய்  கொள் ஓதியில் - ஒருத்தியினுடைய
நெய் பூசிய கூந்தலில்; எற்றினான் - வீசினான்.

உவமையணி:     திருவை  யானை  நீராட்டுதல்.  “வரிநுதல் எழில்
வேழம்  பூ  நீர் மேற் சொரி தரப் புரிநெகிழ் தாமரை  மலர்  அங்கண்
வீறெய்தித் திருநயந்து இருந்தென்ன” (கலி. 47:5-7).  எதிர்  நின்று  தன்
இரு கைகளாலும் நீர் முகந்து தன் காதலியின் முடிமேல்  நீர்  சொரிவது
திருமகள் இருமருங்கும் இரு யானைகள் தம்  கைகளால்  நீர் சொரிவது
போன்றிருந்தது எனும் கற்பனையால். காதலனின் தோள்  அகலும்  அத்
தோள்களுக்கிடையே  கொடி  போன்றுள்ள  அவள்  வடிவமென்மையும்
தெய்வத்தன்மை  தோற்றுவிக்கும்  அவள்  பேரழகும்  சுட்டினார்  இக்
கோலமே கஜலட்சுமி சிற்பங்களாய் இன்று காணப்படும்.            25