பூக்கமழ் ஓரியர் - பூக்களின் நறுமணம் கமழ்கின்ற கூந்தலையுடைய பெண்டிர்;போது போக்கிய சேக்கையின் விளைசெரு - மலர்கள் (மிகப்) பரப்பிய படுக்கைகளிலே விளைகின்ற கலவிப் போரிலே; செருக்கும் சிந்தையர் - களிக்க வேண்டுமென்ற மனத்தினராய்; ஆக்கிய அமிழ்தென - அப்போரில் வெல்வதற்கென ஆக்கப்பட்ட அமிழ்தம் போல; அம்பொன் வள்ளத்து வாக்கிய பசு நறை - அழகிய பொற்கிண்ணத்தில் ஊற்றிய புதுமதுவைப்; மாந்தல் மேயினார் - பருகத் தொடங்கினர். சோர்வு. களைப்பு ஆகியவை போக்கி. இறப்பு நீக்கி. இளமை நல்க வல்லது அமிழ்து ஆதலின். கலவிப் போர்க்கு இவை செய்யும் அமிழ்தென்று மதுவுண்டனர் என்க. போது போக்கிய: மலர்கள் போடப்பட்ட பொழுது போக்குவதற்காக. சிலேடை. அவனிப் போருக்கு ஆக்கிய மது அன்று இது: அமளிப் போருக்கு என்றே ஆக்கிய அமிழ்தம் இது என்பார். “சேக்கையின் விளை செருச் செருக்கும் சிந்தையர் ஆக்கிய அமிழ்தென்” என்றார். சேக்கை: படுக்கை. அமளி. செரு: போர். வாக்கிய: வார்த்த. செம்பொன் வள்ளம் வளம் மிகுதி குறித்தது. 6 |