கனித்திரள் இதழ் பொதி செம்மை கண்புக - கொவ்வைக் கனிபோன்று திரண்ட இதழ்களில் மிகுந்திருக்கிற செந்நிறம் கண்களில் போய்ச்சேர;நினைப்பது ஒன்று உரைப்பது ஒன்று ஆம் ஒர் நேரிழை - மனத்தால் நினைப்பது ஒன்றும். வாயால் சொல்வது ஒன்றுமாக ஆகிப்போன சிறந்த அணிகள் பூண்டாள் ஒருத்தியின்; தனிச் சுடர்த் தாமரை முகத்துச் சாபமும் - தனி ஒளி வீசும் (அவள்) தாமரை முகத்தில் உள்ள வில்போன்ற புருவங்களும்; குனித்தது; குழவித்திங்கள் பனித்தது - வளைந்தன; நெற்றியென்னும் பிறைச் சந்திரனும் வியர்த்தது. கோபத்தின் குணங்கள் யாவும் கள் உண்பார்க்கு உளவாதல் சுட்டியவாறு. “திங்களுள் தீத் தோன்றியற்று” (கலி 41: 24) என்றாற் போல. “திங்களும் வியர்த்தது” என மதுவின் கொடுமை கூறியவாறு. மதுவுண்பார் உள்ளமும் உரையும் ஒன்றுபடாமல் நினைப்பது ஒன்றும் உரைப்பது ஒன்றும் ஆக ஆவார் என்பார். “நினைப்பது ஒன்று உரைப்பது ஒன்று ஆம் ஒர் நேரிழை” என்றார். 23 |