பக்கம் எண் :

  உண்டாட்டுப் படலம்647

நெகிழாமல்”     (சிலம்பு. 1: 61-62)    வாழும்   வகை   இது.  வீழும்
இருவர்க்கு வழியிடைப் போழப் படா முயக்கு இனிது  (திருக்)  என்பார்
வள்ளுவனாரும்.                                           65
 

1027.அருங் களி மால் களிறு அனைய வீரர்க்கும்.
கருங் குழல் மகளிர்க்கும். கலவிப் பூசலால்.
நெருங்கிய வன முலை சுமக்க நேர்கலா
மருங்குல் போல் தேய்ந்தது - அம் மாலைக் கங்குலே.
 

அருங்களி மால்களிறு அனைய வீரர்க்கும் - (தணித்தற்கு) அரிய
மதமயக்கங்  கொண்ட   ஆண்   யானைகளைப்  போன்ற வீரர்கட்கும்;
கருங்குழல்  மகளிர்க்கும்  
- கரிய கூந்தலுடைய மகளிர்க்கும்; கலவிப்
பூசலால்  
-  (நிகழ்ந்த) கலவிப் போரில் மிதிபட்டதனால்; அம்மாலைக்
கங்குல் நெருங்கிய வனமுலை  சுமக்க நேர்கலா  மருங்குல் போல்
தேய்ந்தது   
-   அந்த   மயக்கந்தரும்    இரவு   (ஒன்றோடொன்று)
நெருங்கியுள்ள அழகிய தனங்கள் சுமப்பதற்கு  ஆற்றலற்ற  (மங்கையர்)
இடையினைப் போல் வரவரக் (குறைந்து) தேய்ந்து போயிற்று.

மழ  களிறு அனையார்க்கும் மயில் அனையார்க்கும்  இடை நிகழ்ந்த
கலவிப்  போரில் இடையே சிக்கிய இரவு. “தேய்புரி  பழங்கயிறு  போல
(நற்.  284)  மகளிர்  இடையாய்த் தேய்ந்தது என்க.  மாலைக்  கங்குல்.
வீரர்க்கும்   மகளிர்க்கும்   கலவிப்  பூசலால்.   வனமுலை   சுமக்கலா
மருங்குல் போல் தேய்ந்தது எனக் கூட்டுக - தற்குறிப்பேற்ற அணி.   66

                           சந்திரன் மறைவும் சூரியன் தோற்றமும்
 

1028.

கடை உற நல் நெறி காண்கிலாதவர்க்கு
இடை உறு திரு என. இந்து நந்தினான்.
படர் திரைக் கருங் கடல் பரமன் மார்பிடைச்
சுடர் மணிக்கு அரசு என. இரவி தோன்றினான்.

 

நல்நெறி கடையுறக் காண்கிலா தவர்க்கு- புண்ணியச் செயல்களை
முடிவு  வரை  முற்றச் செய்யாதவர்கட்கு; இடை உறு திருவென இந்து
நந்தினான்  
-  நடுவே (சில காலம்  சேர்ந்திருந்த) செல்வம் (இடையே)
அழிவது  போல்  சந்திரன்  மறைந்தான்;  பரமன்  மார்பிடை  சுடர்
மணிக்கு  அரசு என
- பரம்பொருளாகிய திருமாலின் மார்பினிடையே
ஒளிர்கின்ற.  மணிகளுக்குள்    அரசாகிய   கவுத்துமணி  (தோன்றுவது)
போல; படர்திரைக்  கருங்கடல்  இரவி  தோன்றினான்  -  பரவிய
அலைகளையுடைய கரிய கடலிடையே சூரியன் தோன்றினான்.

நெறி:     நெறி    காட்டும்  புண்ணியச்  செயல்களைக்  குறித்தது;
ஆகுபெயர்.  இறுதி  வரை   நற்செயல்களைக் கடைப்பிடியாது போவார்
வாழ்க்கை   இருள்   சூழும்    என்பதாயிற்று.    தற்குறிப்பேற்றுதலில்
தனக்குரிய  தனித்துவத்தை   இப்பாடலிலும்  கவிஞர்பிரான் ஏற்றியுள்ள
எழில் கண்டு மகிழ்க. திருமால் மார்பில் உள்ளது  கவுத்துவ  மணி  தன்
அருகில்  உள்ள  திருமகளாம்   சீதையெனும்  பெண்மணியை  மணக்க
உள்ள காலமும் அருகில்  உள்ளதென  நினைப்பித்தவாறு. சுடர்மணிக்கு
அரசு - கவுத்துவ மணி.                                      67