பக்கம் எண் :

654பால காண்டம்  

1037.வார்முகம் கெழுவு கொங்கையர்
   கருங் குழலின் வண்டு
ஏர் முழங்கு அரவம் - ஏழ்
   இசை முழங்கு அரவமே!
தேர் முழங்கு அரவம் - வெண்
   திரை முழங்கு அரவமே!
கார் முழங்கு அரவம் - வெங்
   கரி முழங்கு அரவமே!
 
  

வார்முகம் கெழுவு கொங்கையர் கருங்குழலின்- கச்சில் நிறைந்து
வழியும் கொங்கைகளையுடைய மகளிரின் கரிய கூந்தலில்   மொய்க்கும்;
வண்டு  ஏர்  முழங்கு அரவம்
- வண்டுகள் அழகாக ஒலிக்கும் ஓசை;
ஏழ்  இசை  முழங்கு  அரவமே  
-  ஏழ்வகைச் சுரங்கள் ஒலிக்கின்ற
இசையேயாகும்;  தேர்  முழங்கு அரவம் - (அச்சேனையில்)  தேர்கள்
ஒலிக்கின்ற ஓசை; வெண்திரை முழங்கு அரவமே- வெண்ணிறக் கடல்
அலைகள்  ஒலிக்கும்  ஓசையே  யாகும்; வெங்கரி முழங்கு அரவம் -
வலிய   யானைகள்   பிளிறும்  ஓசை;  கார்  முழங்கு  அரவமே  -
கார்காலத்து (மேகங்கள் ஒலிக்கும் இடி) முழங்கும் முழக்கமே யாகும்.

“படை   யியங்கு அரவம்” (தொல். புறத். 3) எனும் புறப் பொருளை
நினைவில்    கொண்டு.   தசரத   வேந்தன்    படையில்   இயங்கும்
அரவங்களைப்   பல்வகையாக   ஒப்பிட்டு   மகிழ்ந்தவாறு.  மகளிரின்
பெருந்தொகுதியும். யானை தேர்ப்படைகளின் மிகுதியும் கூறியவாறு.   9
 

1038.சூழு மா கடல்களும் திடர் பட. துகள் தவழ்ந்து.
ஏழு பாரகமும் உற்றுளது எனற்கு எளிதுஅரோ-
ஆழியான் உலகு அளந்த அன்று. தாள சென்ற அப்
பூழையூடே பொடித்து. அப்புறம் போயதே!
 
  

துகள்    - (அச்சேனையின் இயக்கத்தால் எழுந்த) புழுதி; சூழும்மா
கடல்  எலாம்  திடர்பட  
- (உலகைச்) சூழ்ந்துள்ள கடலகள் எல்லாம்
மேடாகும்படி; தவழ்ந்து ஏழு பாரகமும் உற்று உளது எனற்கு எளிது
- பரவிச்  சென்று.  மேல்  ஏழ்  உலகத்திலும் போய்ப் பரவியது என்று
சொல்லுதற்கு  (வழி)  (மிக)  எளிதேயாம்;  ஆழியான் உலகு அளந்த
அன்று  
-  (எங்ஙனம்  எனில்)  சக்கரப்  படையையுடைய   திருமால்.
உலகங்களை  அளந்த அக்காலத்தில்; தாள் சென்ற அப்பூழையோடே
பொடித்து  
-  (அவனது) திருவடி என்று  (மேலே துளைத்துச்)  சென்ற
அந்த (அண்டகடாகத்து மேல் முகட்டுத்)  துளைவழியினூடே  நுழைந்து
சென்று;  அப்புறம்  போயது -  (இவ் வண்டத்துக்கு வெளியே உள்ள)
அவ்வண்டத்திலும் (அத்தூளி) பரவிற்று.