வீதிவாய்ச் செல்கின்றான்போல்- (மிதிலை நகரத்து) வீதிகளின் வழியே செல்பவனைப்போல; விழித்து இமையாது நின்ற - இமைக்கவும் செய்யாமல் விழித்துக்கொண்டு நின்ற; மாதரார் கண்கள் ஊடே வாவுமான் தேரில் செல்வான் - மகளிர் கண்களின் வழியே தாவிப் பாய்கின்ற குதிரைகள் பூட்டிய தேரின் மீது செல்பவன் ஆனான். (இராமபிரான்); யாதினும் உயர்ந்தோர் தன்னை யாவர்க்கும் கண்ணன் என்றே ஓதிய பெயர்க்கு- எல்லாப் பொருள்களிலும் சிறந்த பெரியோர்கள் தன்னைக் கண்ணன் என்று கூறியுள்ள திருப்பெயருக்கு; தானே உறு பொருள் உணர்த்திவிட்டான் - மிகுதியாக (மேலும் ஒரு) பொருளைத் தானே. (மகளிர் கண்களுக்குட் சென்ற செயலால் புதியதாக) உணர்த்திவிட்டான். கண்ணன் என்பதற்குரிய பல பெருள்களுள் அடங்காது. மாதர் கண்களுட் செல்கின்றவன் என்ற புதிய பொருளும் உண்டாக்கி. இமையாது விழித்து நோக்கிய மிதிலை மகளிர் கண்களுள் எல்லாம் நிறைந்தான் என்பதாம். “கண்ணன் என்று ஓதிய பெரியோர்.” “கண்ணன் கண் அல்லது இல்லை ஓர் கண்ணே”. (திருவாய் 2.2.1) என்ற நம்மாழ்வாரைப்போன்றோர் என்க. கிருஷ்ணன் என்னும் வடசொலுக்குக் கருநிறமுடையவன்;யாவர் மனத்தையும் கவரும் தன்மையவன் என்று பொருள் என்பர். கண்ணன் என்னும் தமிழ்ச்சொல். அனைவரிடத்தும் கண்ணோட்டமாகிய அருளையுடையவன் என்றும். யாவருக்கும் கண் போன்ற அருமையுடையவன் என்றும். ஞானக் கண்ணை அளிப்பவன் என்றும். எல்லாவிடத்தும் உள்ளவன் என்றும் பொருள் தரும். இப்போது கண்ணன் என்னும் திருநாமத்துக்கு. அனைத்து மகளிருடைய கண்களினூடேயும் செல்லுபவன் என்று மேலும் ஒரு மிகுதியான பொருளைச் சேர்த்துவிட்டான் என்று சுவைப்படக் கூறினார். உறுபொருள் - மிகுதியான பொருள். உறு - மிகுதியெனும் பொருள் பலவாகும் ஓர்உரிச்சொல். இமைப்பின் இராமன் அழகு கோடி பிழைக்கும் என்று “விழித்து இமையாது நின்ற மாதரார் கண்கள்” என்றார். “இமைப்பின் கரப்பாக்கு அறிவல்” (திருக். 1129) என்பது வள்ளுவர் கூறும் காதலிக் கூற்று. 6 |