பக்கம் எண் :

  உலாவியற் படலம்703

                                  தயரதனின் படைப் பெருக்கம்
 

1115.

ஊடு பேர்விடம் இன்றி. ஒன்று ஆம் வகை
நீடு மா கடல் தானை நெருங்கலால்.
ஆடல் மா மத ஆனைச் சனகர் கோன்
நாடு எலாம். ஒரு நல் நகர் ஆயதே.
 

ஊடு  பேர்வு இடம் இன்னி - (இருந்த)  இடத்திலிருந்து   நிலை
பெயர்ந்து  நகர்தற்குரிய  இடைவெளி  சிறிதும்  இன்றி; நீடு  மாகடல்
தானை   நெருங்கலால்
  -  நீண்ட  பெருங்கடல்  போன்று  (தசரத
வேந்தனின்)  படைத்தொகுதி  (அந்நாட்டிடம்  முழுவதும்)  நெருங்கிப்
பரவி நிற்றலால்;  ஆடல்  மாமத  ஆனைச்  சனகர் கோன்  நாடு
எலாம்
- வெற்றியினையே ஏந்தும்  பெரிய  மத  யானைப்படைக்குரிய
சனக மன்னனின் (விதேக) நாடு முழுவதும்; ஒரு  நல்  நகர்ஆயது
(சன நெருக்கம் மிக்க) ஒரே ஒரு நல்ல நகரமாக ஆய்விட்டது. 

கவிஞர்பிரான்  தன் கற்பனைத் திறத்தால். நாட்டை ஒரு நகரமாக்கி
மகிழும்  திறம்  காண்க.  போதுமான  இடமின்றி  நெருங்கியிருத்தலும்.
படைகள்    மிக   இருத்தலும்   நகரத்தின்   இயல்பாய்   அன்றும்
இருந்திருத்தல்  காணலாம். நாட்டும்புறம்  இவையிரண்டுமின்றியிருத்தல்
இன்றும் இயல்பாதல் காண்க.                                53
 

                             அனைவரையும் சனகன் உபசரித்தல்
 

1116.
 

ஒழிந்த என் இனி? ஒண்ணுதல் தாதைதன்
பொழிந்த காதல் தொடர. பொருள் எலாம்
அழிந்து மன்றல் கொண்டாடலின். அன்புதான்
இழிந்துளார்க்கும் இராமற்கும் ஒத்ததே.
 

ஒள்நுதல்  தாதை -  ஒளிமிகும்  நெற்றியாள்  ஆகிய  சீதையின்
தந்தையாகிய   சனக  மன்னன்; தன்  பொழிந்த  காதல்  தொடரப்
பொருள் எலாம் அழிந்து
 -  பொழிகின்ற அன்பின்  வழிபட்டு. தன்
செல்வம்  முழுவதையும்  செலவழித்து; மன்றல்  கொண்டாடலின் -
இத்திருமண     விழாவைக்     கொண்டாடுவதால்;     அன்புதான்
இழிந்துளார்க்கும் இராமற்கும் ஒத்தது
-  அந்த  சனக  மன்னனின்
அன்பு  (வெள்ளம்) தாழ்ந்த நிலையில் உள்ளார்க்கும்.  (அனைவரிலும்
உயர்ந்த)  இராமனுக்கும் சமமாகவே வாய்ந்தது; ஒழிந்த என் இனி? -
(இதற்கு  மேல்  இம்  மண  நிகழ்வுபற்றிக்  கூற)  மீதம்  உள்ளவை
யாவை?.