பக்கம் எண் :

  கோலம் காண் படலம்707

ஆனதனால்   “உரைசெயத் தொழுத கையன் உவந்த உள்ளத்தன்”
ஆனான்  சனகன்.  சீதை. திருமகள் ஆதலால்.  “பெண்ணுக்கு அரசி”
என்றார்.  “கரை  செயற்கு  அரிய  காதல்  கடாவிட”  ஆய  மகளிர்
சென்றனர்   என்பதனால்.   சீதை  மாட்டு  அவர்கள்   வைத்திருந்த
பேரன்பு  புலனாம்.  மகிழ்ச்சியால் அவர்கள் சொற்கள்  தேன்போன்று
இனித்தன  என்பார்.  “பிரைசம்  ஒத்து  இனிய சொல்லார்”  என்றார்.
பிரைசம் - தேன்.                                          2
 

                               தாதியர் சீதைக்கு அழகு செய்தல்
 

1119.

அமிழ் இமைத் துணைகள். கண்ணுக்கு
   அணி என அமைக்குமாபோல்.
உமிழ் சுடர்க் கலன்கள். நங்கை
   உருவினை மறைப்பது ஓரார்.
அமிழ்தினைச் சுவை செய்தென்ன.
   அழகினுக்கு அழகு செய்தார்-
இமிழ் திரைப் பரவை ஞாலம்
   ஏழைமை உடைத்து மாதோ!
 

அமிழ்  இமைத்துணைகள்  கண்ணுக்கு அணி  என அமைக்கு
மாபோல்
 -  (கண்கள்) மறைதற்குக் காரணமான இரண்டு  இமைகளும்
அக்கண்களுக்கு  அழகென்று  (இறைவனால்)   அமைக்கப்பட்டிருப்பது
போல;  உமிழ்  சுடர்க் கலன்கண் நங்கை  உருவினை மறைப்பது
ஓரார்
-  (சீதைக்கு  அணிசெய்யும்  மகளிர்) ஒளிவீசும் ஆபரணங்கள்
சீதையின் (அழகிய)  வடிவத்தை   மறைக்கும் என்னும்   உண்மையை
உணராதவர்களாய்;  அமிழ்தினைச்     சுவை   செய்தென்ன   -
(இயல்பாகவே)     (அத்துணைச்     சுவைகளையும்    பெற்றிருக்கிற)
அமிழ்துக்கு. (கற்கண்டு சர்க்கரை முதலியவை  கொண்டு) மேலும் சுவை
கூட்டும்   முயற்சியைப்   போல; அழகினுக்கு  அழகு  செய்தார் -
(இயற்கையிலேயே)  பேர்  அழகுவாய்ந்த  (சீதையின்  உறுப்புகளுக்கு)
(மேலும்  புதிதாக)  அழகு  செய்யத் தொடங்கினார்கள்; இமிழ்திரைப்
பரவை ஞாலம் ஏழைமை உடைத்து
- அலை ஒலிக்கும் கடல்சூழ்ந்த
இந்நிலவுலகத்து  மக்கள் (நன்மை புரிவதாக  நினைத்துப் பிழைபுரியும்)
அறியாமையுடையவர்கள்.   

மாது.  ஓ - அசைகள். நினைக்கும் நினைவு நல்லதாயினும். அதற்கு
மாறான   செயல்   புரியத்   தொடங்குதல்   பேதைமை.   சீதைக்கு
அணிசெய்யக்    கருதுதலின்    மேல்    வைத்து    அப்பண்பினை
விளக்கியவாறு. பிறமகளிர் அணி தரித்து அழகு செய்வர்.  சீதை அணி
பறித்து  அழகு  செய்வாள்  என  (கம்ப  :  6991)  அவள்  அழகின்
பெருமை  அறிவித்தவாறு.  “அணிகலம் அணிவோர் அணியிலோரே....
இவள்போல்   உறுப்பே  அணிகலமாக  உடையோர்”  (பெருங். 4:17)
ஏழைமை.  அறியாமை  குறித்து  நின்றது.  “செய்யாக்  கோல மோடு
வந்தீர்”   (சிலப்   16:11)   எனக்   கண்ணகியின்  அணியா  அழகு
புகழப்படும்.                                             3