கண்ணன் தன் நிறம்தன் உள்ளக் கருத்தினை நிறைத்து மீதிட்டு - திருமாலின் நிறமானது. சீதையினது மனத்தினை நிரப்பி மேல் எழுந்து; உள்நின்றும் கொடிகள் ஓடி உலகெங்கும் பரந்தது அன்ன - அங்கிருந்தும் பரந்து. கொடிகளாக ஓடி உலகம் முழுவதும் பரவியது போல; வண்ணம்செய் கூந்தல் பார வலயத்து - அழகுசெய்கின்ற கூந்தல் எனும் கனமுடைய வட்டவடிவத்தில்; மழையில் தோன்றும் விண்நின்ற மதியின் - மேகத்தின் இடையே தோன்றும் சந்திரனைப் போல; மென் பூஞ் சிகழிகைக் கோதை சேர்த்தார் - மென்மை வாய்ந்த மலர்களால் ஆன சிகழிகை என்னும் மாலையைச் (சீதைக்குத் தோழியர்) சூட்டினர். உள்ளத்தின் நினைவுகள் முற்றின் உடலிற் பரவி மெய்ப்பாடுகள் ஆகும்; இங்கு அந்நினைவுகள் கூந்தல் ஆயின எனச் சுவைபடக் கூறியவாறு. உயர்வு நவிற்சியால் கூந்தல் உலகு எங்கும் பரந்தது எனப்பெற்றது. இராமனது காயாம்பூ நிறம் உள்ளத்து முற்றி. முளைத்து. செழித்து. படர்ந்து கூந்தலாகிக் கொழுந்து விட்டுப் படர்ந்தன என உருவகித்தார். (நிறம் பற்றிய) எண்ணம் செயலாயிற்று என்றவாறு. சிகழிகை - சிரத்தைச் சுற்றி யணியும் மாலை. கூந்தலுக்கு மேகமும். வட்டமான பூமாலைக்கு மேகத்திடையேயுள்ள வட்ட வெண்மதியும் உவமைகளாயின. “சோனை. வார்குழல் கற்றையில் சொருகிய மாலை. வானமாமழை நுழைதரும் மதி” (கம்ப. 1491) என்பார் மேலும். இராமனைக் கண்ணன் என முன்பும் (கம்ப. 1068) குறிப்பார். 4 |