பக்கம் எண் :

798பால காண்டம்  

                            பரதன் முதலிய மூவர்க்கும் திருமணம்.
  

1259.வள்ளல் தனக்கு இளையோர்கள் தமக்கும்
எள்ளல் இல் கொற்றவன். ‘எம்பி அளித்த
அள்ளல் மலர்த் திரு அன்னவர் தம்மைக்
கொள்ளும்’ எனத் தமரோடு குறித்தான்.*

 

எள்ளல் இல் கொற்றவன்-பழிப்பில்லாத வெற்றிகளையே கொண்ட
சனகன்; எம்பி  அளித்த  அள்ளல்  மலர்திரு  அன்னவர்தம்மை -
என்பின் பிறந்தவனான தம்பி  (குசத்துவசன்)  பெற்ற.  சேற்றில்  மலரும்
செந்தாமரையில் வாழும் திருமகள் அனைய  மகளிரையும்;  கொள்ளும்
என   
-   மணஞ்செய்து  கொள்ளுங்கள்  என்று;  வள்ளல்  தனக்கு
இளையோர்கள்   தமக்கும்  
-  வரையாது  அருளும்  இராமபிரானது
தம்பியராகிய. பரத இலக்குவ. சத்துருக்கனர்க்கும்; தமரோடு  குறித்தான்
-   (தசரத  சக்கரவர்த்தி  முதலிய)   உறவினர்களோடு  மணம்   பேசி
நிச்சயித்தான்.  

சீதையை      வளர்த்தபின்     சனகனுக்குப்பிறந்த    பெண்ஆகிய
ஊர்மிளையை  இலக்குவனுக்கும்.   தம்பி   மகளிராகிய  மாண்டவியைப்
பரதனுக்கும்    சுருதகீர்த்தியைச்   சத்துருக்கனனுக்கும்    நிச்சயித்தனர்
என்பது முதனூலால் பெறப்படும்.                              100
 

1260.கொய்ந் நிறை தாரன். குசத்துவசப் பேர்
நெய்ந் நிறை வேலவன். மங்கையர் நேர்ந்தார்;
மைந் நிறை கண்ணியர். வான் உறை நீரார்.
மெய்ந் நிறை மூவரை மூவரும் வேட்டார்.

 

கொய்ந்நிறை  தாரன் -  மலர்களைக்கொய்து தொடுத்து  நிறைந்த
மாலைகளையணிந்த  மார்பினனாகிய    சனகனும்;   குசத்துவசப்பேர்
நெய்ந்நிறை   வேலவன்  
-  குசத்துவசன்  என்னும்  பெயரையுடைய
நெய்நிறையப்  பூசப்பெற்றுள்ள  வேல்   ஏந்திய   சனகனின்  தம்பியும்
(ஆகிய   இருவரின்);   மங்கையர்  நேர்ந்தார்  -  மகளிர்  மூவரும்
திருமணத்திற்குப்  பொருந்தியவர்  ஆயினர்; மைந்நிறை கண்ணியர் -
மை  நிறைந்த  கண்களை  யுடையவரும்;  வான்உறை நீரார் -  வான
மகளிரின்   தன்மையையுடையவரும்;  மெய்ந்நிறை மூவரை -  பருவம்
நிரம்பினவரும்  ஆகிய அம்மூவரையும்; மூவரும் வேட்டார் -  (இராம
பிரானின் தம்பியராகிய) மூவரும் மணஞ்செய்து கொண்டனர்.  

மெய்    -   ஆகு   பெயராய்ப்   பருவத்தைக்குறித்தது.   சத்திய
ஒழுக்கத்தையும். நிறையென்னும்  பெண்மை  ஒழுக்கத்தையும்  கொண்ட
மகளிர்  என்று  “மெய்ந்நிறை  மூவர்”   எனுந்தொடர்க்குப்   பொருள்
கொள்ளினும் அமையும்.                                     101