பக்கம் எண் :

118அயோத்தியா காண்டம்

     பூதலம் உற்று - தரையில் விழுந்து; அதனில் புரண்ட மன்னன் -
அதன்மீது நிலைகொள்ளாதுஉருண்ட அரசனாகிய தயரதனது;
மாதுயரத்தினை - பெருந்துன்பத்தினை; சொல்ல வல்லார்யாவர் -
அளவிட்டுச் சொல்ல வல்லவர் யார்? (ஒருவரும் இல்லை);  வேதனை
முற்றிட -
துன்பம் முதிர்ச்சி அடைய;  வெந்து வெந்து - மனம் மிக
வெதும்பி; கொல்லன் ஊதுஉலையில் கனல் என்ன - கருமான்
(துருத்தியால் ஊதுகின்ற உலைக்களத்துத் தீயைப்போல; வெய்து
உயிர்த்தான் -
வெப்பம் மிக்க பெருமூச்சு விட்டான்.

     இது கவிக்கூற்று, தயரதன் நெட்டுயிர்ப்பின் வெம்மைக்குக் கொல்லனது
உலைக்களம் உவமை. உலைத்தீ ஊதுந்தொறும் மேலெழுந்து  மீண்டும்
அடங்குவது  போல,  மன்னனது வெப்பம் மிக்க உயிர்ப்பு மிக்கும்
அடங்கியும்  நிகழ்ந்தது. வெந்து வெந்து - அடுக்கு மிகுதிப்பொருளைக்
காட்டுவது.                                                   16

1507.உலர்ந்தது நா; உயிர் ஓடலுற்றது; உள்ளம்
புலர்ந்தது; கண்கள் பொடித்த, பொங்கு சோரி;
சலம் தலைமிக்கது; ‘தக்கது என்கொல்?’ என்று என்று
அலந்து அலையுற்ற, அரும் புலன்கள் ஐந்தும்.

     நா உலர்ந்தது - (தயரதனுக்கு) நாக்கு வறண்டது;  உயிர் ஓடல்
உற்றது -
உயிர்போகத் தொடங்கியது;  உள்ளம் புலர்ந்தது - மனம்
வாடியது; கண்கள் பொங்குசோரிபொடித்த - கண்கள் மிகுதியாகக் குருதி
சிந்தின;  சலம் தலைமிக்கது - கவலை மிகுந்தது; அரும் புலன்கள்
ஐந்தும் -
அரிய ஐந்து பொறிகளும்; தக்கது என்கொல் என்று என்று -
செய்யத்தக்கது என்ன என்று எண்ணி  எண்ணி;  அலந்து அலையுற்ற -
கலங்கித் தவித்தன.

     இதில் தயரதன் அடைந்த அவல மெய்ப்பாடுகள் கட்டப்படுகின்றன.
கோபத்தால் கண்கள் இரத்தம்சிந்தின. புலன் - ஈண்டுப் பொறிகளைக்
குறித்தது; ஆகுபெயர். ‘அலந்து அலையுற்ற’ என்பதனை ‘அலந்தலைஉற்ற’
என்று கொள்வாரும் உண்டு. அலந்தலை - ஒருசொல்; கலக்கம் என்பது
பொருள்.  சலம் - கோபமும்ஆம்.                               17

1508.மேவி நிலத்தில் இருக்கும்; நிற்கும்; வீழும்;
ஓவியம் ஒப்ப உயிர்ப்பு அடங்கி ஓயும்;
பாவியை உற்று எதிர் பற்றி எற்ற எண்ணும்;-
ஆவி பதைப்ப, அலக்கண் எய்துகின்றான்.

     ஆவி பதைப்ப - உயிர் பதைக்கும்படி; அலக்கண் எய்துகின்றான்-
பெருந்துன்பத்தை உறுகின்ற தயரதன்;  நிலத்தில் மேவி இருக்கும் -
தரையில்(சிறிதுபொழுது) பொருந்தி இருப்பான்; நிற்கும் - எழுந்து நிற்பான்;
வீழும் - (மீண்டும்) விழுவான்; ஓவியம் ஒப்ப - சித்திரம்