பக்கம் எண் :

கைகேயி சூழ்வினைப் படலம் 123

1516.‘ “நாரியர் இல்லை இஞ் ஞாலம் எங்கும்” என்ன,
கூரிய வாள்கொடு கொன்று நீக்கி, யானும்,
பூரியர் எண்ணிடை வீழ்வென்’ என்று, பொங்கும் -
வீரியர் வீரம் விழுங்கி நின்ற வேலான்.

     வீரியர் வீரம் விழுங்கி நின்ற வேலான் - பெருவீரர்கள்
வீரத்தையும் வென்று தன்னுள்அடக்கி நிலைபெற்ற வேற்படையை உடைய
தயரதன்;  இஞ் ஞாலம் எங்கும் - இவ்வுலக முழுவதிலும்; நாரியம்
இல்லை என்ன -
பெண்கள் இல்லை என்னும்படி;  கூரிய வாள் கொடு
கொன்றுநீக்கி -
கூர்மை பொருந்திய வாளால் கொலை செய்து போக்கி;
யானும் பூரியர் எண்ணிடைவீழ்வென் என்று - யானும் கீழ்மக்கள்
எண்ணிக்கையில் சேருவேன் என்று; பொங்கும் -சினம் மிகுவான்.

     கைகேயியின் மேல் எழுந்த சீற்றத்தால் தயரதன் பெண்கள்
கூட்டத்தையே அழித்துவிட எண்ணினான்.ஆனால், அச்செயல் தகாது
என்று அடங்கினான். இதனால் அவன் சீற்ற மிகுதி வெளிப்படுகிறது.     26

1517.கையொடு கையைப் புடைக்கும்; வாய் கடிக்கும்;
‘மெய்யுரை குற்றம்’ எனப் புழுங்கி விம்மும்;
நெய் எரி உற்றென நெஞ்சு அழிந்து சோரும் -
வையகம் முற்றும் நடந்த வாய்மை மன்னன்.

     வையகம் முற்றும் நடந்த - உலகம் முழுவதும் பெருவழக்காய்
அறியப் பெற்ற; வாய்மை மன்னன் - சத்தியம் தவறாத தயரதன்; கையொடு
கையைப் புடைக்கும் -
கையுடன்மற்றொரு கையை ஓங்கி அடிப்பான்;
வாய் துடிக்கும் - உதட்டைக் கடிப்பான்;  மெய்உரை குற்றம் என -
உண்மை சொல்லுதல் தீங்கைத் தருவது என்று சொல்லி; புழுங்கிவிம்மும்-
மனம் வெந்து பொருமுவான்; நெய் எரி உற்று என - நெய்யில் நெருப்புப்
பட்டாற்போல;  நெஞ்சு அழிந்து - மனம் உடைந்து; சோரும் -
வருந்துவான்.

     வாய்மை மன்னனாகிய தயரதனை மெய்யுரை குற்றம் என எண்ணச்
செய்தது அவனுக்கு இராமபிரான்பால்உள்ள பேரன்பு. கைபுடைத்தல்
வாய்கடித்தல் ஆகியவை சினத்தால் நிகழும் மெய்ப்பாடுகள்.           27

1518.‘ஒறுப்பினும் அந்தரம், உண்மை ஒன்றும் ஓவா
மறுப்பினும் அந்தரம்’ என்று, வாய்மை மன்னன்,
‘பொறுப்பினும் இந் நிலை போகிலாளை வாளால்
இறுப்பினும் ஆவது இரப்பது’ என்று எழுந்தான்.