பக்கம் எண் :

மந்திரப் படலம் 13

     எம் குலத்துப் பெரியோர்கள் குற்றத்தின் நீங்கி ஆட்சிபுரிந்து மூப்பு
அடைந்த பின்னர்த் தம் பிள்ளைகள் ஆட்சிப் பொறுப்பினை ஏற்கத் தாம்
தவஞ் செய்து வீடுபேறுபெற்றவர்களை எண்ணிப் பார்த்தால், அவர்கள்
எண்ணிறந்த பலராய் இருக்கின்றார்கள் என்பதுகருத்து. நவை - காமம்,
வெகுளி, மயக்கம் என்னும் குற்றங்கள். ஐம்புலன் - சுவை, ஒளி, ஊறு,ஓசை,
நாற்றம் என்பன. உலப்பு - முடிவு.                                16

1330. ‘வெள்ள நீர் உலகினில், விண்ணில், நாகரில்,
தள்ள அரும் பகை எலாம் தவிர்த்து நின்ற யான்,
கள்ளரின் கரந்து உறை காமம் ஆதி ஆம்
உள் உறை பகைஞருக்கு ஒதுங்கி வாழ்வெனோ?

     ‘வெள்ள நீர் உலகில் - கடலால் சூழப்பட்ட இந்த உலகத்திலும் ;
விண்ணில் - வானுலகத்திலும்; நாகரில் - நாகர்கள் வாழும் கீழுலகத்திலும்;
தள்ள அரு பகைஎலாம் - நீக்குதற்கு அரிய (புறப்) பகைவர்களை
எல்லாம் ;  தவிர்த்து நின்ற யான் - ஒழித்து வென்றுநின்ற யான் ;
கள்ளரின் -திருடர்களைப் போன்று ; கரந்துஉறை காமம் ஆதி ஆம்-
ஒளிந்து வாழும் காமம்முதலான ;  உள் உறு பகைஞருக்கு - உள்ளே
பொருந்திய பகைவர்களுக்கு ;  ஒதுங்கிவாழ்வெனோ - அஞ்சி அடங்கி
வாழ்வேனோ? (வாழேன்)

     புறப் பகையை வென்ற யான் அகப் பகையினுக்கு அஞ்சி
அடங்கமாட்டேன்என்பது கருத்து. காமம் ஆதிப் பகைவர்கள் :  காமம்,
குரோதம், லோபம் (கடும்பற்றுள்ளம்) மோகம், மதம், மாற்சரியம் என்பன ;
இவற்றை வடநூலார் அரிஷட்வர்க்கம்என்பர். இவ்வாறனையும் காமம்,
வெகுளி, மயக்கம் என்னும் மூன்றனுள் அடக்கிக் கூறுவது தமிழ்மரபு.

     தயரதன் மூவுலகும் வென்றவன் என்பது, “மாகமும் நாகமும்
மண்ணும் வென்றவாளான்”
(1515) என்று பின்னரும் சுட்டப்படுவது
காணலாம். ஓகாரம் எதிர்மறை.                                   17

1331. ‘பஞ்சி மென்தளிர் அடிப்
     பாவை கோல் கொள,
வெஞ் சினத்து அவுணர்
     தேர் பத்தும் வென்றுளேற்கு,
எஞ்சல் இல் மனம்
     எனும் இழுதை ஏறிய
அஞ்சு தேர் வெல்லும்
     ஈது அருமை ஆவதோ?

     ‘பஞ்சி மென் தளிர் அடிப் பாவை - செம்பஞ்சுக் குழம்பு பூசப்பட்ட
மென்மையான தளிர்போலும் பாதங்களையுடைய கைகேயி ;  கோல்கொள -
சாட்டைகொண்டு தோரோட்ட ; வெம் சினத்து