வண்டு தங்கிய தொங்கல் மார்பன்-வண்டுகள் மொய்க்கின்ற மாலையை அணிந்த மார்பினையுடைய தயரதன்; மயங்கி - அறிவு அழிந்து; விம்மியவாறு எலாம் கண்டு - புலம்பியவற்றை எல்லாம் பார்த்து; நெஞ்சு கலங்கி -மனம் கலங்கி; அம் சிறை ஆன - அழகிய சிறகுகளாகிய; காமர் துணைக் கரம்கொண்டு- அழகிய இரு கைகளால்; தம் வயிறு எற்றி எற்றி - தம் வயிற்றில் பலமுறை அடித்துக்கொண்டு; விளிப்ப போன்றன - அழுவன போன்றிருந்தன. இது முதல் பதினாறு பாடல்களில் வைகறைப் பொழுதில் நிகழும் நிகழ்ச்சிகள் புனைந்துரைக்கப்படுகின்றன. வைகறையில் இயல்பாகக் கூவும் கோழிகள் கைகேயியால் துன்புற்ற தயரதனைப் பார்த்து அடித்துக்கொண்டு அழுவன போன்றிருந்தன என்பது தற்குறிப்பேற்ற அணி. இந்த அணிக்கு, ‘சிறை ஆன காமர் துணைக்கரம் என வரும் உருவக அணி அங்கமாய் அமைந்தது. கோழி - பால்பகா அஃறிணைப் பெயர். ஏ - ஈற்றசை. ஒப்பு: | தையல் துயர்க்குத் தரியாது தஞ்சிறகாம் கையால் வயிறலைத்துக் காரியருள்வாய் - வெய்யோனை வாவுபரித் தேரேறி வாவென் றழைப்பனபோல் கூவினவே கோழிக் குலம் (நளவெண்பா 280) 51 |
1542. | தோய் கயத்தும், மரத்தும், மென் சிறை துள்ளி, மீது எழு புள் எலாம் தேய்கை ஒத்த மருங்குல் மாதல் சிலம்பின் நின்று சிலம்புவ - கேகயத்து அரசன் பயந்த விடத்தை, இன்னது ஓர் கேடு சூழ் மா கயத்தியை, உள் கொதித்து, மனத்து வைவன போன்றவே. |
தோய் கயத்தும் - நீராடும் குளங்களிலிருந்தும்; மரத்தும் - மரங்களிலிருந்தும்; மென் சிறை துள்ளி - மெல்லிய சிறகுகளால் குதித்துக்கொண்டு; மீது எழு புள் எலாம் -வானத்தில் பறக்கின்ற பறவைகள் எல்லாம்; தேய்கை ஒத்த மருங்குல் - தேய்வு பொருந்திய சிற்றிடையையுடைய; மாதல் சிலம்பின் நின்று - பெண்களின் பாதச் சிலம்புகள்போலிருந்து; சிலம்புவ - ஒவிப்பவை; கேகயத்து அரசன் பயந்த விடத்தை -கேகேய மன்னன் பெற்றெடுத்த விடம்போன்றவளை; இன்னது ஓர்கேடு சூழ் - இத்தகைய கெடுதியைச்சூழ்ந்து செய்த; மா கயத்தியை - மிக்க கீழ்மையுடையவளை; உட்கொதித்து - உள்ளம் புழுங்கி; மனத்து வைவன போன்ற - மனத்திற்குள் ஏசுவனவற்றை ஒத்திருந்தன; ஏ -அசை. பறவைகள் விடியற் காலத்தில் ஒலிப்பதைக் கைகேயி செயல்கண்டு அவளைத் |