பக்கம் எண் :

கைகேயி சூழ்வினைப் படலம் 141

 விரித்த பந்தர் பிரித்தது ஆம் என,
     மீன் ஒளித்தது - வானமே.

     சிரித்த பங்கயம் ஒத்த - மலர்ந்த தாமரைப் பூக்களைப் போன்ற;
செங்கண்திருமாலை இராமனை - சிவந்த கண்களையுடைய திருமாலாகிய
இராமபிரானது;  கரிக் கரம்பொரு அக் கைத்தலத்து - யானையினது
துதிக்கையை நிகர்ந்த அந்தக் கையில்;  உயர்காப்பு நாண் -  சிறந்த
மங்கல நாணை;  அணிதற்கு முன் - பூண்பதற்கு முன்னமே;  இம் மண்
அனைத்தும் நிழற்ற -
இவ்வுலகம் முழுவதும் நிழல் செய்யும் வண்ணம்;
வரித்ததண் கதிர் முத்தது ஆகி- கட்டின குளிர்ந்த கிரணங்களையுடைய
முத்து வரிசைகளையுடையதாய்; மேல் விரித்த - வானத்தில் பரப்பி
வேயப்பட்டிருந்த; பந்தர் - பந்தல்; பிரித்தது ஆம் என- பிரிக்கப்பட்டது
போல; வானம் - ஆகாயம்; மீன் ஒளித்தது- விண்மீன்களோடு மறைந்தது.

     வானத்தையே பந்தலாகவும், விண்மீன்களை முத்துச்சரங்களாகவும்
கொண்டு, காலையில் விண்மீன்கள்மறைவதைப் பந்தலைப் பிரிக்கையில்
முத்துச்சரங்கள் அகற்றப்பெற்றன போன்றிருந்தது என்றார்.இது
தற்குறிப்பேற்றம். மங்கல நிகழ்ச்சிகளுக்கு முன்,  அதற்குரிய தலைவன்
வலங்கையில்காப்புக் கயிறு  (இரட்சா பந்தனம்) கட்டுதல் மரபு. சிரித்த
பங்கயம் - இல்பொருள் உவமை. இராமனை - இராமனுக்கு;  வேற்றுமை
மயக்கம்.                                                     54

மகளிர் எழுதல்  

1545.‘நாம விற் கை இராமனைத் தொழும் நாள்
     அடைந்த நமக்கு எலாம்,
காம விற்கு உடை கங்குல் மாலை கழிந்தது’
     என்பது கற்பியா,
தாம் ஒலித்தன பேரி; அவ் ஒலி,
     சாரல் மாரி தழங்கலால்,
மா மயில் குலம் என்ன, முன்னம்
     மலர்ந்து எழுந்தனர், மாதரே,

     நாம வில் கை இராமனை - பகைவர்க்கு அச்சத்தைத் தரும்
கோதண்டம் ஏந்திய கையையுடையஇராமனை;  தொழும் நாள் அடைந்த
நமக்கு எலாம் -
வணங்கும் நல்ல நாளைப் பெற்ற நம்அனைவர்க்கும்;
காமன் விற்கு உடை கங்குல் மாலை - மன்மதனது கரும்பு வில்லுக்குத்
தோற்றுத்துன்புறுதற்கு இடமான இராப்பொழுது;  கரித்தது - நீங்கியது;
என்பது கற்பியா -என்பதைத் தெரிவித்துக் கொண்டு; பேரி ஒலித்தன -
முரசங்கள் ஒலித்தன; அவ் ஒலி- அந்த ஓசை; சாரல் மாரி தழங்கலால்-
மலைப் பக்கங்களில் தங்கிய