பக்கம் எண் :

154அயோத்தியா காண்டம்

என்பாரும் - ஆடவர் தொகுதியே மிகுதி என்பவரும்;  மகளிரே பெரிது
என்பாரும் -
பெண்டிர் தொகுதியேமிகுதி என்பவரும்;  போந்ததே
பெரிது  என்பாரும் -
வந்து  சேர்ந்தவர் கூட்டமே மிகுதிஎன்பவரும்;
புகுவதே பெரிது  என்பாரும் - வரப்போகும் கூட்டமே  மிகுதியாக
இருக்கும் என்பவரும் ஆக;  தேர்ந்ததே தேரின் அல்லால் - தாம்
அறிந்ததையே அறிந்ததன்றி; யாவரே தெரியக் கண்டார் - எவர்தாம்
முழுவதும் நன்றாய் அறிந்தவர்? (ஒருவருமில்லைஎன்றபடி).

     இதனால் ஒவ்வொரு குழுவும் அளவிட முடியாதவாறு மிகுதியாய்
இருந்தது  என்பது குறிக்கப்பட்டது. வேந்தர் முதலியவர் அவரவர்
தொகுதிக்கு ஆகிவந்தனர்;  ஆகுபெயர்.  பெரிது என்னும் ஒன்றன்பால்
வினைமுடிபுக்கு ஏற்ப அவ்வாறு கொள்ளல் வேண்டும். மகளிரைப் பின்னர்க்
குறித்தமையின்மாந்தர்  என்பது அவர்களை நீக்கி ஆடவரை மட்டும்
கூட்டியது.                                                    73

மகளிர் கூட்டத்தின் வருகை  

1564.குவளையின் எழிலும், வேலின்
     கொடுமையும், குழைத்துக் கூட்டி,
திவளும் அஞ்சனம் என்று ஏய்ந்த
     நஞ்சினைத் தெரியத் தீட்டி,
தவள ஒண் மதியுள் வைத்த
     தன்மை சால் தடங் கண் நல்லார்,
துவளும் நுண் இடையார், ஆடும்
     தோகை அம் குழாத்தின் தொக்கார்.

     குவளையின் எழிலும் - கருங்குவளை மலரின் அழகையும்; வேலின்
கொடுமையும் -
வேற்படையின் கொலைத் தன்மையையும்;  குழைத்துக்
கூட்டி -
ஒன்றாய்க் கலந்து சேர்த்து; திவளும் அஞ்சனம் என்று ஏய்ந்த-
விளங்குகின்ற மை என்று பெயர்பொருந்திய;  நஞ்சினைத் தெரியத்
தீட்டி
- விடத்தை விளங்கப் பூசி ;  தவளஒன்மதியுள் வைத்த தன்மை
சால் -
வெள்ளிய ஒளிமிக்க சந்திரனிடத்தில் வைத்தாற்போன்றதன்மை
அமைந்த; தடங் கண் நல்லார் - பெரிய கண்களையுடைய அழகியவரும்;
துவளும் நுண் இடையார்-துவளுகின்ற மெல்லிய இடையினையுடையவரும்
ஆகிய மகளிர்; ஆடும் தோகைஅம் குழாத்தின் - நடனமாடும் ஆழகிய
மயிற்கூட்டம் போல;  தொக்கார் - வந்துகூடினர்.

     குவளையின் அழகையும் வேலின் கொடுமையையும் சேர்த்து,
மையாகிய நஞ்சினைப்பூசி, மதியுள்வைத்தன போலும் கண்கள் என்பது
இல்பொருள் உவமை. ‘அஞ்சனம் என்று ஏய்ந்த நஞ்சு’ என்பது உருவகம்.
தோகை - ஆகுபெயர்.                                         74