| பொரு அரு தேரில் செல்ல, புறத்திடைக் கண்டார் போல்வார். |
சேவகன் திரு மணி மகுடம் சூட - (அப்பெண்கள்) வீரனாகிய இராமன் அழகிய இரத்தினம் பதிக்கப்பெற்ற கிரீடம் சூட்டிக்கொள்வதற்கு; செல்கின்றான் என்று - (தேரில்) போகின்றான் என்று அறிந்து; காதலோடு உவகை முந்த - அன்பும் மகிழ்ச்சியும் தூண்டுதலால்; ஒருவரின் ஒருவர் முந்த - ஒருவருக்கொருவர் முற்பட்டு; இருகையும் இரைத்து மொய்த்தார்- இரு பக்கங்களிலும் ஆரவாரித்துக்கொண்டு நெருங்கினார்கள்; இன் உயிர் யார்க்கும் ஒன்றாய் - (அவர்கள்) இனிய உயிர் எல்லார்க்கும் ஒன்றாகி; புறத்திடை பொரு அருதேரில் செல்ல - வெளியில் ஒப்பற்ற தேரில் போக; கண்டார் போல்வார் - அதனைப் பார்த்தவரைப் போல்பவரானார். மகளிர் தம் உயிரெல்லாம் திரண்டு இராமன் என்னும் ஒருவடிவம் கொண்டு புறத்தே போவதைக்கண்டவர் போன்றவர் ஆயினர் என்பது கருத்து. இரு கை - தெருவின் இருபக்கங்கள். 87 1578. | துண்ணெனும் சொல்லாள் சொல்ல, சுடர் முடி துறந்து, தூய மண் எனும் திருவை நீங்கி வழிக்கொளா முன்னம், வள்ளல் பண் எனும் சொல்லினார்தம் தோள் எனும் பணைத்த வேயும், கண் எனும் கால வேலும், மிடை நெடுங் கானம் புக்கான். |
துண்ணெனும் சொல்லாள் சொல்ல - நடுங்கத்தக்க சொல்லினையுடைய கைகேயி சொல்லுதலால்; வள்ளல் - இராமபிரான்; சுடர் முடி துறந்து - ஒளி பொருந்திய முடிசூடுதலைத் தவிர்ந்து; தூய மண் எனும் திருவை நீங்கி - தூய்மையுடைய நிலமகள் என்னும் செல்வியையும் பிரிந்து; வழிக் கொளா முன்னம் - (காடு) செல்லுவதற்கு முன்னரே; பண் எனும் சொல்லினார்தம் - இசைப்பாட்டு என்று சொல்லத்தக்க சொற்களையுடைய பெண்களில்; தோள் எனும் பணைத்த வேயும் - தோள்களாகிய பருத்த மூங்கில்களும்; கண் எனும் கால வேலும் - கண்கள் என்னும் யமனைப் போன்ற வேல்களும்; மிடை நெடுங்கானம் புக்கான் - செறிந்த பெருங்காட்டில் புகுந்தான். பெண்கள் கூட்டம் மொய்த்து நோக்க, இராமபிரான் தேரில் சென்றான் என்பதாம்.பின்வரும் நிகழ்ச்சியை முன்னே பொருந்திக் கூறியுள்ள நயம் கருதத்தக்கது. இவ்வாறு கம்பர்பாடுதலை 20, 2828, 3151, 4759 முதலிய பாடல்களாலும் உணரலாம். 88 |