பக்கம் எண் :

கைகேயி சூழ்வினைப் படலம் 163

 பொரு அரு தேரில் செல்ல,
     புறத்திடைக் கண்டார் போல்வார்.

     சேவகன் திரு மணி மகுடம் சூட - (அப்பெண்கள்) வீரனாகிய
இராமன் அழகிய இரத்தினம் பதிக்கப்பெற்ற கிரீடம் சூட்டிக்கொள்வதற்கு;
செல்கின்றான் என்று -
(தேரில்) போகின்றான் என்று அறிந்து; காதலோடு
உவகை முந்த -
அன்பும் மகிழ்ச்சியும் தூண்டுதலால்; ஒருவரின் ஒருவர்
முந்த - 
ஒருவருக்கொருவர் முற்பட்டு;  இருகையும் இரைத்து
மொய்த்தார்
- இரு பக்கங்களிலும் ஆரவாரித்துக்கொண்டு நெருங்கினார்கள்;
இன் உயிர் யார்க்கும் ஒன்றாய் - (அவர்கள்) இனிய உயிர் எல்லார்க்கும்
ஒன்றாகி;  புறத்திடை பொரு அருதேரில் செல்ல - வெளியில் ஒப்பற்ற
தேரில் போக;  கண்டார் போல்வார் -
அதனைப் பார்த்தவரைப்
போல்பவரானார்.

     மகளிர் தம் உயிரெல்லாம் திரண்டு இராமன் என்னும் ஒருவடிவம்
கொண்டு புறத்தே போவதைக்கண்டவர் போன்றவர் ஆயினர்  என்பது
கருத்து.  இரு கை - தெருவின் இருபக்கங்கள்.                     87

1578.துண்ணெனும் சொல்லாள் சொல்ல,
     சுடர் முடி துறந்து, தூய
மண் எனும் திருவை நீங்கி
     வழிக்கொளா முன்னம், வள்ளல்
பண் எனும் சொல்லினார்தம்
     தோள் எனும் பணைத்த வேயும்,
கண் எனும் கால வேலும்,
     மிடை நெடுங் கானம் புக்கான்.

     துண்ணெனும் சொல்லாள் சொல்ல - நடுங்கத்தக்க
சொல்லினையுடைய கைகேயி சொல்லுதலால்;  வள்ளல் -
இராமபிரான்;
சுடர் முடி துறந்து -
ஒளி பொருந்திய முடிசூடுதலைத் தவிர்ந்து; தூய மண்
எனும் திருவை நீங்கி -
தூய்மையுடைய நிலமகள் என்னும் செல்வியையும்
பிரிந்து; வழிக் கொளா முன்னம் -
(காடு) செல்லுவதற்கு முன்னரே; பண்
எனும் சொல்லினார்தம் -
இசைப்பாட்டு என்று சொல்லத்தக்க
சொற்களையுடைய பெண்களில்;  தோள் எனும் பணைத்த வேயும் -
தோள்களாகிய பருத்த மூங்கில்களும்; கண் எனும் கால வேலும் - கண்கள்
என்னும் யமனைப் போன்ற வேல்களும்; மிடை நெடுங்கானம் புக்கான் -
 
செறிந்த பெருங்காட்டில் புகுந்தான்.

     பெண்கள் கூட்டம் மொய்த்து நோக்க, இராமபிரான் தேரில் சென்றான்
என்பதாம்.பின்வரும்  நிகழ்ச்சியை முன்னே பொருந்திக் கூறியுள்ள நயம்
கருதத்தக்கது.  இவ்வாறு கம்பர்பாடுதலை  20, 2828, 3151, 4759 முதலிய
பாடல்களாலும் உணரலாம்.                                      88